திராவிட இயக்கத்துக்கு துரோகம் இழைத்தது யார்? ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? சைதை துரைசாமி பேச்சு


திராவிட இயக்கத்துக்கு துரோகம் இழைத்தது யார்? ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? சைதை துரைசாமி பேச்சு
x
தினத்தந்தி 21 Oct 2018 10:15 PM GMT (Updated: 21 Oct 2018 9:34 PM GMT)

திராவிட இயக்கத்துக்கு துரோகம் இழைத்தது யார்?, இதுபற்றி ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என்று கேட்டு சைதை துரைசாமி பேசினார்.

எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் நேற்று திருச்சியில் எம்.ஜி.ஆரின் 101-வது ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு தேவராஜ் ஆண்ட்ரூஸ் தலைமை தாங்கினார். விழாவில் சென்னை மாநகர முன்னாள் மேயரும், உலக எம்.ஜி.ஆர். பேரவை தலைவருமான சைதை துரைசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். ஒரு தீர்க்க தரிசி. இறைதூதர். உலகில் புகழின் உச்சியில் இருந்த எந்த ஒரு நடிகரும் இறந்த பிறகு கொண்டாடப்படுவது இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர். மட்டும் தான் இறந்த பிறகும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். தனக்கென ஒரு கொள்கை வைத்து நடித்தவர். அவர் நடித்த பாத்திரங்கள், பாடிய பாடல்கள், பேசிய வசனங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியவை.

நாங்கள் கடவுளாக வழிபட்டுக்கொண்டிருக்கும் எம்.ஜி.ஆரை பற்றி தி.மு.க. நாளேட்டில் ஒரு கட்டுரை வெளி வந்து உள்ளது, அந்த கட்டுரையை எழுதியவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வுக்கு செய்த துரோகத்தால் உருவான இயக்கம் தான் அ.தி.மு.க., மக்கள் உப்புக்கல்லை வைரமாக நினைத்ததால் உருவானது அ.தி.மு.க. அந்த இயக்கம் தோன்றிய 47 ஆண்டு காலத்தில் தமிழன் தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொண்டான் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து கடைசியில் மனிதனை கடித்து... என ஒரு பழமொழி சொல்வார்களே அதைப்போன்று தான் இது உள்ளது. எம்.ஜி.ஆர். பற்றி இப்படி ஒரு விமர்சனம் செய்வதற்கு ஸ்டாலின் யார்? எம்.ஜி.ஆர். பற்றி விமர்சனம் செய்து இருப்பதை எம்.ஜி.ஆர். பக்தர்களால் தாங்கி கொள்ள முடியாது. எம்.ஜி.ஆரை சீண்ட வேண்டாம். நாங்கள் சீறினால் நீங்கள் தாங்கி கொள்ள மாட்டீர்கள் என எச்சரிக்க விரும்புகிறேன்.

எம்.ஜி.ஆருடன் நான் தி.மு.க.விலும் இருந்தவன் என்ற அடிப்படையில் எனக்கு வரலாறு தெரியும். இந்த வரலாற்றை மறைத்து தி.மு.க .குற்றம்சாட்டி வருகிறது. எம்.ஜி.ஆர். பணத்தையும், உழைப்பையும் தி.மு.க.வுக்கு வழங்கினார். அதனால் தான் அண்ணா எம்.ஜி.ஆரை தனது இதயக்கனி என குறிப்பிட்டார்.

திராவிட இயக்கத்துக்கு துரோகம் செய்தவர் என்றால் அது கருணாநிதி தான். சூழ்ச்சி, துரோகத்தால் தலைமை பதவியை பிடித்து ஆட்சி அதிகாரத்தில் தனது குடும்பத்தினருக்கு இடம் பிடித்து கொடுத்தார். 1971 தேர்தலில் காமராஜர் தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி பேசினார். இதற்கு பதில் அளித்த எம்.ஜி.ஆர். தி.மு.க.வை தேர்தலில் வெற்றி பெற செய்யுங்கள், ஊழல் நடந்தால் நான் தட்டிக்கேட்பேன் என்றார்.

தேர்தலில் அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதி படிதான் 1972-ல் தட்டி கேட்டார். இதற்காக கருணாநிதி அவரை கட்சியில் இருந்து நீக்கினார். தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆரை நீக்கியபோது தமிழகத்தில் ஒரு வார காலம் வாகன போக்குவரத்து நடைபெறவில்லை. மக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள்.

சீனா, ரஷியாவில் ஏற்பட்டது போல் மக்கள் புரட்சி வெடித்தது. அப்படி மக்கள் நடத்திய புரட்சியின் மூலம் உருவாகி மக்களால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் அ.தி.மு.க. அதனால் தான் எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த வரை கருணாநிதியால் பதவிக்கு வரமுடியவில்லை.

திராவிட இயக்கத்திற்கு கருணாநிதி செய்த துரோகங்கள் பற்றி என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? ஸ்டாலின் மட்டும் அல்ல அந்த கட்சியில் யார் வந்தாலும் நான் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தக பை, விதவை பெண்ணிற்கு தையல் எந்திரம், சிலருக்கு பண உதவி ஆகியவற்றை சைதை துரைசாமி வழங்கினார். மதுரை மாநகராட்சி முன்னாள் துணைமேயர் நவநீதகிருஷ்ணன், ஜெயம் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story