இந்து முன்னணி மாவட்ட தலைவரை கண்டித்து சாலை மறியல்
![இந்து முன்னணி மாவட்ட தலைவரை கண்டித்து சாலை மறியல் இந்து முன்னணி மாவட்ட தலைவரை கண்டித்து சாலை மறியல்](https://img.dailythanthi.com/Articles/2018/Oct/201810220309308641_Protesting-the-Hindu-Front-District-Leader_SECVPF.gif)
செந்துறை அருகே இந்து முன்னணி மாவட்ட தலைவரை கண்டித்து சாலை மறியல்
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கீழமாளிகை கிராமத்தை சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன். இவர் செந்துறை திராவிடர் கழக ஒன்றிய செயலாளராக உள்ளார். சம்பவத்தன்று இவர் பொன்பரப்பி வழியாக மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதற்கிடையில் பொன்பரப்பி ஏரிக்கரையில் இந்து முன்னணியின் அரியலூர் மாவட்ட தலைவர் ராஜசேகர் மரக்கன்றுகள் நட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த முத்தமிழ் செல்வனுக்கும், ராஜசேகருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ராஜசேகரனை கண்டித்து, முத்தமிழ்செல்வன் மற்றும் அவரது உறவினர்களும் பொன்பரப்பி–ஜெயங்கொண்டம் சாலையில் நேற்று மாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராஜசேகர், முத்தமிழ்செல்வனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் வலியுறுத்தினர். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.