திக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர நிறைவு விழா ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்


திக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர நிறைவு விழா ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்
x
தினத்தந்தி 22 Oct 2018 10:30 PM GMT (Updated: 22 Oct 2018 2:37 PM GMT)

திக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர நிறைவு விழாவில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

களியக்காவிளை,

மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி மகாதேவர் கோவில் தாமிரபரணி ஆற்றின் படித்துறையில் மகா புஷ்கர விழா கடந்த 12–ந் தேதி தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில், வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பீட சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில், சிறப்பு பூஜைகள், யாகங்கள், ருத்ர ஹோமம், தாமிரபரணி ஆற்றுக்கு ஆரத்தி போன்றவை நடந்தன. மேலும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது.

விழா நாட்களில் சண்டிஹோமம், திருவாசக வேள்வி, சிறப்பு பூஜை, ஆரத்தி, அபிஷேகம் போன்றவை நடந்தது. மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

மகா புஷ்கர விழா நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் மகா சண்டிஹோமம், சிறப்பு பூஜைகளும், மாலையில் பிரதோ‌ஷ வழிபாடு, நதிக்கு ஆரத்தி, நந்திக்கு அபிஷேகம் போன்றவை நடந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

விழாவில் வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பீட சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சிவபிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாரிய சுவாமிகள், கல்லிடைக்குறிச்சி சத்திய ஞானமகா தேவதேசிக பரமாச்சாரிய சுவாமிகள், அய்யா வழி சிவசந்திரன் சுவாமிகள், பா.ஜனதா மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, புஷ்கர விழா கமிட்டி தலைவர் ஜெயசீலன், திருகயிலை புகு நெறி சிவனடியார் கூட்ட தலைவர் ஜெயந்தி வெள்ளதுரை மற்றும் சிவனடியார்கள் உள்பட பல்லாயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.

Next Story