உளுந்தூர்பேட்டை அருகே: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு


உளுந்தூர்பேட்டை அருகே: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு
x
தினத்தந்தி 22 Oct 2018 10:00 PM GMT (Updated: 22 Oct 2018 5:46 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

அரசூர், 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.கொணலவாடி கிராமத்தை சேர்ந்தவர் தனபால் மகன் பன்னீர்செல்வம்(வயது 34). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக உளுந்தூர்பேட்டை சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அடுத்த மூலசமுத்திரம் என்ற இடம் அருகே வந்த போது சாலையில் கிடந்த கல் மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியதாக தெரிகிறது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து பன்னீர்செல்வம் தவறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பன்னீர்செல்வத்தின் மனைவி கலைச்செல்வி உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story