திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மேலும் 20 நாட்கள் ஆய்வு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பேட்டி


திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மேலும் 20 நாட்கள் ஆய்வு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பேட்டி
x
தினத்தந்தி 22 Oct 2018 11:15 PM GMT (Updated: 22 Oct 2018 7:01 PM GMT)

சிலைகளின் தொன்மை தன்மை குறித்து திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மேலும் 20 நாட்கள் ஆய்வு தொடரும் என போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் சிலைகளின் தொன்மை தன்மை குறித்து நேற்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். நேற்று ஆய்வு பணிகளை பார்வையிட வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் லண்டனில் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலையை காட்சிக்கு வைத்து, அந்த சிலை மீட்கப்பட்டது குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 1951-ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் சிவபுரத்தை சேர்ந்த அன்னமுத்து என்பவருடைய நிலத்தை தோண்டும்போது 6 சிலைகள் கிடைத்தன. அதில் ஒரு சிலை தான் இந்த நடராஜர் சிலை. இந்த சிலையை சிவபுரத்தில் இருந்து மும்பை வழியாக லண்டனுக்கு கடத்தி சென்றனர். அங்கிருந்து இந்த சிலை மீட்கப்பட்டு திருவாரூர் சிலை பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு இதுவரை பூஜைகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை. சுமார் 4 ஆயிரம் சிலைகளுக்கு தனித்தனியாக பூஜைகள் நடத்த முடியுமா? என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்று தான் கூற முடியும். இந்த சிலைகள் எந்த கோவிலில் இருக்க வேண்டுமோ அங்கு தான் இருக்க வேண்டும்.

சிலை பாதுகாப்பு மையம் இல்லாததால் தான் இதுபோன்ற சூழ்நிலை நிலவுகிறது. லண்டனில் இருந்து மீட்கப்பட்ட இந்த நடராஜர் சிலை உள்பட 6 சிலைகள் கடத்தப்பட்டது குறித்து கடந்த 1969-ம் ஆண்டு வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த சாமியின் இறைவியான சிவகாமி அம்பாள் சிலை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது. அதனுடன் சோமாஸ்கந்தர் சிலையும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாங்கள் சிலை பாதுகாப்பு மையங்களை கட்ட வேண்டும் என கூறி 400 நாட்கள் ஆகி விட்டன. ஆனால் இந்து சமய அறநிலையத்துறை ஒரு பாதுகாப்பு மையத்தை கூட கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து ஐகோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.

திருவாரூர் சிலை பாதுகாப்பு மையத்தில் இன்னும் 20 நாட்களுக்கு சிலைகளின் தொன்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். அரசும், இந்துசமய அறநிலையத்துறையும் போதிய ஒத்துழைப்பு தருகிறது. இந்த நடராஜர் சிலை ரூ.75 கோடி மதிப்புடையதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story