‘சாலை விதிகளை முறையாக பின்பற்றினாலே விபத்துகள் குறைந்துவிடும்’ - கலெக்டர் பேச்சு


‘சாலை விதிகளை முறையாக பின்பற்றினாலே விபத்துகள் குறைந்துவிடும்’ - கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 23 Oct 2018 10:00 PM GMT (Updated: 23 Oct 2018 8:19 PM GMT)

வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாக பின்பற்றினாலே விபத்துகள் குறைந்துவிடும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.

காரைக்குடி,

காரைக்குடி போக்குவரத்து காவல்துறை, ஷீரடி சாய் சேவா சங்கம், வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிவகங்கை மாவட்ட சாலை பாதுகாப்பு படை, ஆப்பிள் மொபைல்ஸ், சக்ரா பிரிண்டர்ஸ் ஆகியவை சார்பில் காரைக்குடியில் நேற்று ஒரேநாளில் 60 இடங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் தொடக்க விழாவாக ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள் ஊர்வலம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் வாகன சோதனை சாவடி மையம் பகுதியில் தொடங்கியது. இந்த விழாவிற்கு கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

அவர் கூறும்போது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு என்பது அனைவருக்கும் பொருந்தக்கூடியது. ஒவ்வொருவரும் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றி நடக்க வேண்டும். மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர்கள் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு பயந்து கொண்டு ஹெல்மெட் அணியக்கூடாது. அவர்கள் தங்களது உயிரை பாதுகாக்க வேண்டும் என்று அக்கறையோடு ஹெல்மெட் அணிய முன்வரவேண்டும். சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றினாலே விபத்துகள் குறைந்துவிடும். சிவகங்கை மாவட்டத்தில் மாதந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தி விபத்துகளை தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், சப்-கலெக்டர் ஆஷா அஜீத், வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சாலை பாதுகாப்பு படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்மணிமாறன் வரவேற்றார். இதைத்தொடர்ந்து காரைக்குடி பகுதியில் உள்ள 60 இடங்களில் வித்யாகிரி கல்விக்குழு மாணவ-மாணவிகள் வாகனங்களில் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டுதல், சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் வழங்குதல், போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து பொதுமக்களிடையே வினாடி-வினா போட்டி நடத்துதல், சாலை விழிப்புணர்வு பாடல்களை பாடுதல், ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு பரிசுகள் வழங்குதல், இலவச மருத்துவ முகாம், சாலை பாதுகாப்பு குறித்த குறும்படம் காண்பித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினர்.

பின்னர் காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகே பஸ் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு முதலுதவி பெட்டிகளை காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் வழங்கினார்.

Next Story