ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிப்பு; ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதுகிறது


ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிப்பு; ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதுகிறது
x
தினத்தந்தி 23 Oct 2018 11:00 PM GMT (Updated: 23 Oct 2018 8:20 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம்,

கடந்த 3 ஆண்டுகளாக மழை இல்லாமல் வறண்டுபோன ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்து வந்த மழை கடந்த 2 நாட்களாக சற்று ஓய்ந்து வெயில் அடித்து வருகிறது. இந்த மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரில் நோய்களை பரப்பும் கொசுக்கள் அதிகஅளவில் உற்பத்தியாகி பகல், இரவு வேளைகளில் மக்களை கடித்து அவதியடைய செய்து வருகிறது.

இந்த நிலையில் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் உருவாகி வருவதால் டெங்கு காய்ச்சல் அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. பகல் வேளைகளில் கொசுக்களின் தாக்குதல் அதிக அளவில் உள்ளதால் டெங்கு கொசுக்களாக இருக்குமோ என்று மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதற்கேற்ப மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல், உடல்வலி உள்ளிட்ட உபாதைகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்ததும் அனைவருக்கும் அடுத்தடுத்து காய்ச்சல் தொற்றிவிடுகிறது. இதனால் ஒட்டுமொத்த குடும்பமே காய்ச்சலால் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்காரணமாக ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. நோயாளிகளை பரிசோதிக்கும் டாக்டர்கள் சாதாரண வைரஸ் காய்ச்சல்தான் என்று கூறிவருகின்றனர். ஆனால், கடந்த காலங்களில் டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா நோய்களுக்கு இருந்த பாதிப்புகளே தற்போதும் அதிகம் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு தொடர் காய்ச்சல், உடல்வலி, தலைவலி, கண்களில் கடுமையான வலி, தசை மற்றும் மூட்டு வலி, அடிக்கடி வாந்தி எடுத்தல் போன்ற அறிகுறிகள் அதிகம் இருப்பதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உருவாகி உள்ள காய்ச்சல் பாதிப்பு சாதாரண வைரஸ் காய்ச்சல்தான். கடந்த காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் இருந்த பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. ஆனால் இவை பெரும்பாலும் வைரஸ் காய்ச்சலாகத்தான் உள்ளது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொசு மருந்து புகை, மருந்து தெளித்தல், கொசுப் புழுக்களை கண்டறிந்து அழித்தல் போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் போது ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. தொடர் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை செய்து தேவையான மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் தண்ணீர், காற்று, எச்சில், இருமல் போன்றவற்றால் பரவாது. ஏ.டி.எஸ். கொசுவால் மட்டுமே பரவும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினர்.

பரமக்குடி பகுதியிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 3 நாட்களுக்கு காய்ச்சல் விடாமல் நீடிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் பரமக்குடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் மற்றும் நர்சுகள் இல்லாததால் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் பல மணி நேரம் காத்துக்கிடக்கின்றனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் நோயாளிகள், பல மணி நேரம் கால் கடுக்க நீண்ட வரிசையில் காத்திருப்பதால் மேலும் சிரமத்துக்குள்ளாகின்றனர். காய்ச்சலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதால் சுகாதாரத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story