விவசாய தொழிலாளர்களுக்கு கருணை தொகை கோரி ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர்களுக்கு கருணை தொகை கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2018 10:45 PM GMT (Updated: 23 Oct 2018 9:37 PM GMT)

விவசாய தொழிலாளர்களுக்கு கருணை தொகை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணராயபுரம்,

விவசாய தொழிலாளர் களுக்கு கருணை தொகை வழங்கக்கோரி மாநிலம் தழுவிய அளவில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் ஆண்டியப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் மாணிக்கம் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் பாலன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து பேசி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து தமிழகத்தில் வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு கருணை தொகை ரூ.5 ஆயிரம் வழங்கிட வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி நாட்களை 200 ஆக உயர்த்தி குறைந்த பட்ச ஊதியம் ரூ.500 வழங்க வேண்டும். இத்திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் செயல்படுத்த வேண்டும். வயது முதிர்ந்த விவசாய தொழிலாளிக்கு ஓய்வூதியமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். வீடு இல்லாத ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். காவிரி ஆற்றில் இருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து பஞ்சப்பட்டி ஏரியை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் விவசாய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் நடேசன் நன்றி கூறினார்.

Next Story