மத்திய-மாநில அரசுகளை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்


மத்திய-மாநில அரசுகளை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2018 10:45 PM GMT (Updated: 23 Oct 2018 9:50 PM GMT)

கிருஷ்ணகிரியில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் விவசாய தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கருப்பு கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான சேகர் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தீபாவளி கருணை தொகையாக தலா ரூ.5 ஆயிரம் போர்கால அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறும் உரிமையை 200 நாளாக உயர்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய தொழிலாளர்களின் தினசரி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.500 என நிர்ணயம் செய்து வழங்கிட வேண்டும். பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கும் வகையில் மத்திய சட்டம் திருத்தப்பட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களின் மீது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை உடனே கட்டுப்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் பாயும் அனைத்து ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைத்து, பாசன பகுதியை விரிவுப்படுத்த வேண்டும். படேதலாவ் ஏரி கால்வாய் திட்டத்தை பர்கூர், போச்சம்பள்ளி தாலுக்காக்களில் உள்ள ஏரிகளுக்கு புதிய கால்வாய் வெட்டி நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையை உடனடியாக சீர்செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கருப்பு கொடி ஏந்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மாதையன், தொலை தொடர்புத்துறை சங்க நிர்வாகி முனியன், மாவட்ட குழு உறுப்பினர்ள் மாதையன், சித்தன், சின்னராஜ், செல்வம், மாது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story