திருத்துறைப்பூண்டி அருகே ரெயில் பாதையில் கிராம மக்கள் தர்ணா கீழ்பாலத்தை விரிவுபடுத்த வலியுறுத்தல்


திருத்துறைப்பூண்டி அருகே ரெயில் பாதையில் கிராம மக்கள் தர்ணா கீழ்பாலத்தை விரிவுபடுத்த வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Oct 2018 10:45 PM GMT (Updated: 24 Oct 2018 6:53 PM GMT)

திருத்துறைப்பூண்டி அருகே ரெயில்வே கீழ் பாலத்தை விரிவுபடுத்த வலியுறுத்தி கிராம மக்கள் ரெயில் பாதையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர்-காரைக்குடி இடையே அகல பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி இடையேயான பணிகள் முடிவடைந்து விட்டன.

திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் தண்டவாளம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதையொட்டி திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் கிராமத்தில் இருந்து ஓவர்குடி செல்லும் சாலையின் குறுக்கே ரெயில்வே கீழ்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் நகர பகுதியான திருத்துறைப்பூண்டிக்கு செல்வதற்கு நெடும்பலம்-ஓவர்குடி சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கீழ்ப்பாலம் மிகவும் குறுகலாக இருப்பதால், லாரிகள், நெல் அறுவடை எந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே கீழ்பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று நெடும்பலம் கிராம மக்கள் ரெயில் பாதையில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கீழ்ப்பாலத்தில் வாகனங்கள் செல்லும் அளவுக்கு விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் விஜயா, ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Next Story