தண்ணீர் தொட்டிகளை சுத்தமாக பராமரிக்காத விடுதி உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்


தண்ணீர் தொட்டிகளை சுத்தமாக பராமரிக்காத விடுதி உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 25 Oct 2018 10:45 PM GMT (Updated: 25 Oct 2018 7:40 PM GMT)

தண்ணீர் தொட்டிகளை சுத்தமாக பராமரிக்காத விடுதியின் உரிமையாளருக்கு அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

கும்பகோணம்,

கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகரில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகங்களின் மண்டல இயக்குனர் காளிமுத்து, நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி, நகர் நல அதிகாரி பிரேமா, சுகாதார ஆய்வாளர்கள் சாமிநாதன், பாலசுப்பிரமணியன், முருகேசன், மணிகண்டன் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது ஆயிகுளம் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர். இதில் தண்ணீர் தொட்டிகளில் பாசிகள் படர்ந்து, கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தண்ணீர் தொட்டிகளை சுத்தமாக பராமரிக்காத விடுதியின் உரிமையாளருக்கு அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகங்களின் மண்டல இயக்குனர் காளிமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

கும்பகோணம் பகுதியில் உள்ள வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ஆம், இல்லை என குறிப்பிடப்பட்ட 52 கட்டங்கள் உள்ளன. துப்புரவு பணியாளர்கள் வரும்போது சம்பந்தப்பட்ட வீடுகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் கழிவு நீர் தேங்கி உள்ளதா? என பார்த்து, தேங்கியிருந்தால் ஆம் என்ற கட்டத்திலும், தண்ணீர் தேங்காமல் தூய்மையாக இருந்தால் இல்லை என்ற கட்டத்திலும் ‘டிக்’ செய்ய வேண்டும்.

வீடுகள், ஓட்டல்களை சுற்றி கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கியிருந்தால், அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story