புதுச்சேரி ரவுடி கொலையில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை; காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பு


புதுச்சேரி ரவுடி கொலையில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை; காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 25 Oct 2018 11:45 PM GMT (Updated: 25 Oct 2018 8:19 PM GMT)

புதுச்சேரி ரவுடியை கொலை செய்த 2 பேருக்கு, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறப்பட்டது.

காரைக்கால்,

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவர் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதே ஊரைச்சேர்ந்த இளவரசன், கார்த்தி, வினோத், விக்னேஸ்வரன் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் கார்த்தி, வினோத், விக்னேஸ்வரன் ஆகிய 3 பேரும் புதுச்சேரி கோர்ட்டு உத்தரவின் பேரில், ஜாமீனில் வந்து காரைக்கால் டவுன் போலீஸ் நிலையத்தில் தினசரி கையெழுத்து போட்டுவந்தனர்.

அதனை அறிந்த ஜெகனின் தம்பி ராஜேஷ் வயது (32), தனது அண்ணனை கொலை செய்த கார்த்தியை பழிக்குப்பழியாக கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதற்கு துணையாக, தனது நண்பர்கள் உருளையன்பேட்டையைச் சேர்ந்த கெஸ்தான் (29), சத்தியசீலன், கோவிந்தசாலையைச் சேர்ந்த சூர்யா, ஏரிபாக்கத்தைச்சேர்ந்த முத்தமிழன் ஆகியோரை சேர்த்துக் கொண்டார்.

கடந்த 9.1.18 அன்று கார்த்தியின் நண்பர்களான குருமாம்பேட்டை சேர்ந்த அரவிந்த நாராயணன், நவீனன் ஆகியோரை கடத்தி, தங்களது கொலைக்கு உதவி செய்யாவிட்டால் இருவரையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி காரைக்காலுக்கு அழைத்துச் சென்றார். காரைக்கால் பி.கே சாலைக்கு சென்றதும், அரவிந்த நாராயணன் மற்றும் நவீனனை கார்த்தியுடன் பேசச்செய்து அவரை காரைக்கால் பி.கே சாலைக்கு வரவழைத்தனர். அதன்படி அங்கு வந்த கார்த்தியை, ராஜேஷ், கெஸ்தான் ஆகியோர் ஓட ஓட விரட்டி கொலை செய்தனர்.

இந்த கொலை குறித்து, காரைக்கால் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ், கெஸ்தான் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது காரைக்கால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த காரைக்கால் மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் குற்றம்சாட்டப்பட்ட ராஜேஷ், கெஸ்தான் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக ராஜேஷுக்கு மேலும் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார். இந்த தண்டனைகளை ராஜேஷ் ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் கைதான சத்தியசீலன், சூர்யா, முத்தழகன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story