கடத்துவதற்காக குவித்து வைத்திருந்த மணல்-டிராக்டர் பறிமுதல் 6 பேர் மீது வழக்குப்பதிவு


கடத்துவதற்காக குவித்து வைத்திருந்த மணல்-டிராக்டர் பறிமுதல் 6 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 25 Oct 2018 11:00 PM GMT (Updated: 25 Oct 2018 8:56 PM GMT)

மணிகண்டம் அருகே உள்ள கோரையாற்றுப்பகுதியில் கடத்துவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மணல், ஒரு டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

மணிகண்டம்,

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள கோலார்பட்டியை ஒட்டியுள்ள கோரையாற்றின் திருச்சி -புதுக்கோட்டை மாவட்ட எல்லைப்பகுதியில் அதே ஊரை சேர்ந்த பலர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். இது குறித்த புகாரின் பேரில் விராலிமலை மற்றும் ஸ்ரீரங்கம் தாலுகாவைச் சேர்ந்த வருவாய் துறையினர், மணிகண்டம், மாத்தூர் போலீசார் நடவடிக்கை எடுத்து கோலார்பட்டியை சேர்ந்த சிலரை கைது செய்தும் மணல் கடத்தி சென்ற டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்தும் வந்தனர்.

ஆனாலும் ஒருசில அரசு அதிகாரிகளின் ஆதரவோடு மணல் கடத்தல் தொடர்ந்தது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மணிகண்டம் போலீஸ் நிலையத்திற்கு புதிதாக இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் பொறுப்பேற்றவுடன் கோரையாற்றுப்பகுதியில் மணல் கடந்தலை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்து பலரை கைது செய்து சிறையில் அடைத்தார். பறிமுதல் செய்த வாகனங்களையும் அதன் உரிமையாளர்கள் உடனடியாக மீட்க முடியாத அளவிற்கு வழக்கு பதிவு செய்தார். இதனால் அந்த பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மணல் கடத்தல் குறைந்து காணப்பட்டது. அதேநேரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் விடுமுறையில் இருக்கும்போது வழக்கம்போல மணல் கடத்தப்பட்டு வந்தது. இதை மற்ற அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கோலார்பட்டி அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் அதிக அளவில் லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மணிகண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, ஜெகதீசன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை அந்த பகுதிகளுக்கு சென்று கண்காணித்தனர். அப்போது சிலர் ஆற்றின் ஓரத்தில் உள்ள ஒரு இடத்தில் ஆற்றுக்குள் இருந்து டிராக்டர் மூலம் மணல் ஏற்றிவந்து லாரிகளில் கடத்துவதற்காக குவித்துக்கொண்டு இருந்தனர்.

அந்த இடத்திற்கு போலீசார் வருவதை பார்த்ததும் டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டு அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் பின்னர் காலை 6 மணியளவில் போலீசார் அந்த பகுதிகளை சுற்றிபார்த்தபோது பல்வேறு இடங்களில் சுமார் 50 லாரிகளில் ஏற்றக்கூடிய அளவிற்கு கடத்துவதற்காக மணல் குவித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு மணலுடன் நின்ற டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்ததுடன், மணல் குவியல் குறித்து வருவாய்த்துறை, கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ஸ்ரீரங்கம் தாசில்தார் கனகமாணிக்கம், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் அண்ணாத்துரை ஆகியோர் அங்கு வந்து மணல் குவியலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அந்த மணலை அரசு கட்டுமான பணிகளுக் காக லாரிகளில் ஏற்றி ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மணிகண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், மணல் கடத்தல் குறித்து கோலார்பட்டியை சேர்ந்த சுப்பையா, பெரியசாமி, பாண்டி, ராஜூ, அருள், ராஜேந்திரன் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய அவர்களை தேடி வருகிறார். இந்த 6 பேரில் 3 பேர் ஏற்கனவே மணல் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story