மதுரவாயலில் பரிதாபம்: தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு


மதுரவாயலில் பரிதாபம்: தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 29 Oct 2018 10:15 PM GMT (Updated: 29 Oct 2018 5:04 PM GMT)

மதுரவாயலில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பூந்தமல்லி,

சென்னை, ஏழுகிணறு, போர்ச்சுகஸ் சர்ச் தெருவை சேர்ந்தவர் முகமது சுகைல்(வயது 29). பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல், ஆலப்பாக்கம் சாலை சந்திப்பு அருகே சென்றபோது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறிய முகமது சுகைல் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

அப்போது அதே லாரியின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் முகமது சுகைல் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முகமதுசுகைல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்த பாபு(47) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story