8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் உண்ணாவிரதம் நாமக்கல்லில் நடந்தது


8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் உண்ணாவிரதம் நாமக்கல்லில் நடந்தது
x
தினத்தந்தி 29 Oct 2018 10:15 PM GMT (Updated: 29 Oct 2018 5:32 PM GMT)

நாமக்கல்லில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் பூங்கா சாலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சி ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு மாவட்ட துணை தலைவர் அசோகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரபிரசாத் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சி.ஐ.டி.யு மாநில துணை தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் வேலுசாமி, சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்த போராட்டத்தின் போது விடுபட்ட தகுதி உள்ள துப்புரவு பணியாளர்களுக்கும், 3 ஆண்டுகள் பணி முடித்த துப்புரவு பணியாளர்களுக்கும் சிறப்பு காலமுறை ஊதியத்தை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு குழு காப்பீட்டில் ரூ.3 லட்சத்தை வழங்க வேண்டும்.

மேலும் ஓய்வு பெறும் துப்புரவு பணியாளர்களுக்கு அரசாணையின்படி பணிக்கொடையாக ரூ.50 ஆயிரமும், ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரமும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். முடிவில் சம்மேளனத்தின் மாநில குழு உறுப்பினர் கந்தசாமி போராட்டத்தை முடித்து வைத்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

Next Story