சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை
x
தினத்தந்தி 29 Oct 2018 11:45 PM GMT (Updated: 29 Oct 2018 10:03 PM GMT)

வீரபாண்டி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர்,

திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள பலவஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 48), கூலிதொழிலாளி. இவரது உறவினர் வீடு அதே பகுதியில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 26–11–2017 அன்று சுப்பிரமணியம் தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது உறவினர் வீட்டின் அருகே 7 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள்.

சுப்பிரமணியம் அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை அருகில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். இது குறித்து அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது நடந்த விவரத்தை பெற்றோரிடம் அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து திருப்பூர் தெற்கு மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சுப்பிரமணியத்தை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தீர்ப்பளித்தார். இதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக சுப்பிரமணியத்திற்கு ஆயுள் தண்டனையும், பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் பரிமளா ஆஜராகினார்.


Next Story