இலவச வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் - குறைதீர்வு நாள் கூட்டத்தில் திருநங்கைகள் மனு


இலவச வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் - குறைதீர்வு நாள் கூட்டத்தில் திருநங்கைகள் மனு
x
தினத்தந்தி 29 Oct 2018 11:22 PM GMT (Updated: 29 Oct 2018 11:22 PM GMT)

இலவச வீடு கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம், திருநங்கைகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்தனர்.

கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, வங்கிக்கடன், ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, கடனுதவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட 405 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்துக்குச் சென்று அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

வேலூர் தாலுகாவைச் சேர்ந்த 14 திருநங்கைகள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்த மனுவில், எங்களுக்கு விரிஞ்சிபுரம் பகுதியில் அரசு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. வேலையின்மை, பொருளாதார சூழ்நிலை காரணமாக அங்கு எங்களால் வீடு கட்ட இயலவில்லை. எனவே பசுமை வீடு திட்டத்தின் கீழ் எங்களுக்கு இலவச வீடு கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். படித்த திருநங்கைகளுக்கு அவர்களின் படிப்புக்கு ஏற்ப அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், எனத் தெரிவித்திருந்தனர்.

வாலாஜா தாலுகா சீக்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் வந்து கொடுத்த ஒரு மனுவில், எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக ஏலசீட்டு நடத்தி வந்தார். அவரிடம் நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் சீட்டுக்கு ஏற்ப பணம் செலுத்தி வந்தோம். சீட்டுக்கான பணம் செலுத்தியும் அதற்கான தொகையை இதுவரை அவர் திருப்பி தரவில்லை. ஒவ்வொரு நபருக்கும் ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம் என சுமார் ரூ.50 லட்சத்துக்கும் மேல் சீட்டு பணம் தர வேண்டி உள்ளது. இந்த நிலையில் அவர் கடந்த 14-ந்தேதியில் இருந்து திடீரெனத் தலைமறைவாகி விட்டார். நாங்கள் செலுத்திய பணத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறியிருந்தனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட செயலாளர் ஞானவேலு கொடுத்த மனுவில், வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தற்போது வணிகம் செய்து வரும் வணிகர்களுக்கு ஏலம் இல்லாமல் கடைகள் வழங்க வேண்டும். வேலூர் மாநகராட்சி அரசு மதிப்பின்படி நியாயமாக நிர்ணயம் செய்யும் வாடகையை வழங்க வணிகர்கள் தயாராக உள்ளனர். வேலூர் நேதாஜி மார்க்கெட் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் கடைகள் கட்டப்பட்டால் தற்போது வணிகம் செய்யும் வணிகர்களுக்கு முன்னுரிமை வழங்கி மீதமுள்ள கடைகளை பொது ஏலமிட வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

வேலூர் சின்ன அல்லாபுரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் காணப்படும் ஆக்கிரமிப்புகளால் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும். கால்வாய்களை தூர்வார வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள், 7 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்கள் மற்றும் ஒரு பயனாளிக்கு சிறப்பு சக்கர நாற்காலி என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ.62 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் வழங்கினார்.

இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், ஆதிதிராவிட நல அலுவலர் கஜேந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு) பேபி இந்திரா மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story