அரசு பள்ளி ஆசிரியருக்கு 5¼ ஆண்டு சிறை தண்டனை - ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் மகளிர் கோர்ட்டு உத்தரவு


அரசு பள்ளி ஆசிரியருக்கு 5¼ ஆண்டு சிறை தண்டனை - ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் மகளிர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 Oct 2018 11:15 PM GMT (Updated: 30 Oct 2018 8:53 PM GMT)

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் அரசு பள்ளி ஆசிரியருக்கு 5¼ ஆண்டு சிறை தண்டனை வழங்கி மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டது.

தர்மபுரி,

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பான வழக்கில் அரசு பள்ளி ஆசிரியருக்கு 5¼ ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மொத்தம் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் தர்மபுரி மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஏ.பள்ளிப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் செந்தில்குமார் (வயது 32). இவர் கடந்த 2016-ம் ஆண்டு 7-ம் வகுப்புக்கு பாடம் நடத்தினார். அப்போது அந்த வகுப்பில் படித்த 4 மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் உமாமகேஸ்வரி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் செந்தில்குமார் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.

இந்த வழக்கில் 4 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதால், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012-ன் கீழ், ஒவ்வொரு குழந்தைக்கும் அளித்த தொந்தரவிற்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், இந்திய தண்டனை சட்டத்தின் 323-வது பிரிவின் கீழ் தலா 3 மாத சிறை தண்டனையும் என 4 மாணவிகளுக்கும் ஏற்பட்ட பாதிப்பிற்காக செந்தில்குமாருக்கு தனித்தனியாக தலா 5¼ ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் என மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிபதி (கூடுதல் பொறுப்பு) ஜீவானந்தம் தீர்ப்பளித்தார்.

இந்த தண்டனையை செந்தில்குமார் ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட 4 மாணவிகளுக்கும் ஆசிரியர் செந்தில்குமார் தலா ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சம் இழப்பீட்டு தொகையை 1 மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட 4 மாணவிகளுக்கு சமூக நலத்துறை உள்ளிட்ட அரசின் துறைகள் மூலமாக தேவையான உதவிகளை வழங்கவும் தர்மபுரி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story