நாமக்கல்லில் சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல் - 18 பேர் கைது


நாமக்கல்லில் சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல் - 18 பேர் கைது
x
தினத்தந்தி 30 Oct 2018 10:45 PM GMT (Updated: 30 Oct 2018 9:40 PM GMT)

நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,

சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் சின்னப்பையன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் ராஜேந்திரன், ஜெயராஜ், இணை செயலாளர்கள் பெருமாள், தமிழரசி, சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நடேசன், மாநில துணை தலைவர் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் சரோஜா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்த போராட்டத்தின் போது, குடும்ப பாதுகாப்புடன் கூடிய மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். விலைவாசிக்கு ஏற்ப உணவு மானியத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்து மினிபஸ்சில் ஏற்றி திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். இதில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

சத்துணவு ஊழியர்களின் போராட்டம் காரணமாக பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் பணியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story