போளூரில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக விவசாயி கைது


போளூரில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக விவசாயி கைது
x
தினத்தந்தி 30 Oct 2018 9:45 PM GMT (Updated: 30 Oct 2018 10:20 PM GMT)

போளூரில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.

போளூர், 


போளூரை அடுத்த பொத்தரை கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 33), விவசாயி. இவருக்கும் கார் பள்ளத்தை சேர்ந்த புருஷோத்தமன் மகள் தரணி (21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. திருமணத்தின் போது தரணியின் பெற்றோர் ரூ.75 ஆயிரம் ரொக்கம், 25 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர்.

மேலும் வரதட்சணை கேட்டு பச்சையப்பன், தரணியை துன்புறுத்தி வந்துள்ளார். இதனையடுத்து தரணியின் பெற்றோர் மேலும் ரூ.50 ஆயிரம் பச்சையப்பனுக்கு கொடுத்து உள்ளனர். இந்த நிலையில் பச்சையப்பனுக்கும், அதே ஊரை சேர்ந்த பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி தரணிக்கு தெரியவந்தது. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பச்சையப்பன், தரணியை அடித்து உதைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். இதனால் மனம் உடைந்த தரணி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்தார்.

தற்கொலை செய்துகொண்ட தரணிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் திருவண்ணாமலை உதவி கலெக்டர் தங்கவேலு மேல் விசாரணை நடத்தினார்.

விசாரணையில், பச்சையப்பன் தகராறு செய்து அடித்து உதைத்ததால் தரணி தற்கொலை செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பச்சையப்பனை போலீசார் கைது செய்தனர்.


Next Story