அலட்சியமாக செயல்பட்ட போக்குவரத்து போலீஸ்காரர் பணி இடைநீக்கம்


அலட்சியமாக செயல்பட்ட போக்குவரத்து போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 31 Oct 2018 12:01 AM GMT (Updated: 31 Oct 2018 12:01 AM GMT)

அலட்சியமாக செயல்பட்ட போக்குவரத்து போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை கொலபா ரிகல் ஜங்ஷன் அருகே உள்ள சாலையில், அண்மையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரமாக ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது தொடர்பாக ஆம்னி பஸ் டிரைவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்து போலீஸ்காரர் சச்சின் சுதாம் என்பவர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதன்படி அங்கு சென்ற போலீஸ்காரர் சச்சின் சுதாம், குறிப்பிட்ட 5 ஆம்னி பஸ் டிரைவர்களுக்கு மட்டும் அபராதம் விதித்து உள்ளார்.

மற்ற ஆம்னி பஸ்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இது தொடர்பாக அவர்கள் விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

இந்த விசாரணையில், போக்குவரத்து போலீஸ்காரர் சச்சின் சுதாம் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படியாமல் பணியில் அலட்சியமாக இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதை போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் தீபாலி உறுதிப்படுத்தினார்.

Next Story