தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை சாத்தான்குளத்தில் 219 மி.மீ. பதிவு


தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை சாத்தான்குளத்தில் 219 மி.மீ. பதிவு
x
தினத்தந்தி 3 Nov 2018 10:00 PM GMT (Updated: 3 Nov 2018 11:59 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 219 மி.மீ. மழை பதிவானது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 219 மி.மீ. மழை பதிவானது.

பலத்த மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பல இடங்களில் பலத்த மழையும், பிற இடங்களில் மிதமான மழையும் பெய்தது. மாவட்டத்தில் சாத்தான்குளம், குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

தூத்துக்குடி நகர் பகுதிகளில் பெய்த கனமழையால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. தூத்துக்குடி தருவை மைதானத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தூத்துக்குடி டபிள்யூ.ஜி.சி. ரோட்டில் ரெயில் நிலையம் செல்லும் சாலைப்பகுதி, தூத்துக்குடி–திருச்செந்தூர் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மேலும் மாநகராட்சி சார்பில், தேங்கி கிடக்கும் தண்ணீர் வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பலத்த மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டார்.

காட்டாற்று வெள்ளம்

சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் மிதமான மழை பெய்தது. பின்னர் நள்ளிரவில் இருந்து விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலத்தின் வழியாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அமுதுண்ணாக்குடி குளம், கரடிகுளம் உள்ளிட்ட குளங்களில் பாதி அளவுக்கும் அதிகமாக தண்ணீர் நிரம்பியது.

சாத்தான்குளம் அமராவதி குளத்துக்கு செல்லும் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அதன் அருகில் உள்ள ஆர்.சி. வடக்கு தெருவில் உள்ள 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. உடனே சாத்தான்குளம் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து வாய்க்கால் கரையில் உள்ள சீமை கருவேல மரங்கள், புதர் செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி, தண்ணீரை வடிய வைத்தனர். அந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. இதேபோன்று குலசேகரன்பட்டினத்திலும் இரவு முழுவதும் விடிய விடிய பலத்த மழை பெய்தது.

உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின

உடன்குடி, திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம், நாசரேத், தட்டார்மடம், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூர், ஏரல், ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, குரும்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு முழுவதும் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. ஆறுமுகநேரியில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின. ஆறுமுகநேரி வாரச்சந்தை வளாகத்தில் தண்ணீர் தேங்கியதால், மெயின் ரோட்டின் அருகில் வியாபாரிகள் கடைகளை அமைத்து பொருட்களை விற்பனை செய்தனர்.

கயத்தாறில் நேற்று அதிகாலையில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. பின்னர் மதியம் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. கோவில்பட்டியில் காலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. எட்டயபுரத்தில் அதிகாலையில் மிதமான மழை பெய்தது. காலையில் பலத்த மழை சிறிதுநேரம் பெய்தது.

மழை அளவு விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளம் பகுதியில் 219 மி.மீ. மழையும், குலசேகரன்பட்டினம் பகுதியில் 195 மி.மீ. மழையும், திருச்செந்தூர் பகுதியில் 112 மி.மீ. மழையும் பதிவானது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:–

திருச்செந்தூர் – 112

குலசேகரன்பட்டினம் – 195

காயல்பட்டினம் – 78.4

விளாத்திகுளம் – 5

காடல்குடி – 12

வைப்பாறு– 7

சூரங்குடி – 5

கோவில்பட்டி – 3

கயத்தாறு – 7

கடம்பூர் – 19

கழுகுமலை – 10

ஓட்டப்பிடாரம் – 45

மணியாச்சி – 70

வேடநத்தம் – 7

கீழஅரசடி – 0.9

எட்டயபுரம் – 3

சாத்தான்குளம் – 219

ஸ்ரீவைகுண்டம் – 70

தூத்துக்குடி – 8.6


Next Story