தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை கும்பகோணத்தில் அதிகபட்சமாக 51 மி.மீட்டர் பதிவு


தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை கும்பகோணத்தில் அதிகபட்சமாக 51 மி.மீட்டர் பதிவு
x
தினத்தந்தி 3 Nov 2018 11:00 PM GMT (Updated: 3 Nov 2018 6:57 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கும்பகோணத்தில் அதிகபட்சமாக 51 மி.மீட்டர் மழை பதிவானது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தொடங்கியுள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. தஞ்சையில் காலை முதல் மதியம் வரை மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை. இதனால் நேற்றுமுன்தினம் களை இழந்த தீபாவளி விற்பனை நேற்று களை கட்டியது. தஞ்சை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தஞ்சைக்கு ஜவுளி எடுக்க வந்திருந்தனர். திடீரென பிற்பகல் 2.45 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தீபாவளி பண்டிகையையொட்டி சாலையோரம் தரைக்கடைகள் ஏராளமாக போடப்பட்டுள்ளன. மழை பெய்ததால் தரைக்கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். தாங்கள் விற்பனைக்காக வைத்திருந்த துணிமணிகள் நனைந்துவிடக்கூடாது என்பதற்காக தார்பாய் போட்டு மூடினர். இந்த மழை 3 மணி வரை பெய்தது.

மழை நின்றவுடன் லேசாக வெயில் அடித்தது. அதன் பிறகு விற்பனை வழக்கம்போல் நடைபெற்றது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெல் சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகள் பச்சை நிறத்தில் தார்பாய் போர்த்தியது போல் நெற்பயிர்கள் வளர்ந்து காணப்படுகிறது.

களை எடுக்கும் பணி, உரம் போடும் பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர். நன்றாக வளர்ந்து காணப்படும் நெற்பயிர்களுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். கும்பகோணத்தில் அதிகபட்சமாக 51 மில்லிமீட்டர் மழை பெய்தது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்றுகாலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

கல்லணை-22.4, திருக்காட்டுப்பள்ளி-29.2, திருவையாறு-27, தஞ்சை-18, பாபநாசம்-38, கும்பகோணம்-51, பூதலூர், வல்லம்-40, மதுக்கூர்-44, பட்டுக்கோட்டை-23.

Next Story