புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழை சாலையோர வியாபாரிகள் அவதி


புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழை சாலையோர வியாபாரிகள் அவதி
x
தினத்தந்தி 3 Nov 2018 10:30 PM GMT (Updated: 3 Nov 2018 8:32 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலையோர வியாபாரிகள் அவதி அடைந்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புதுக்கோட்டை திலகர் திடல், பொது அலுவலக வளாகம், தற்காலிக பஸ் நிலையம், பால் பண்ணை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. மேலும் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அன்னவாசல்

இதேபோல அன்னவாசல், இலுப்பூர், வீரப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, செங்கப்பட்டி, சித்தன்னவாசல், குடுமியான்மலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2-வது நாளாக நேற்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் உள்ள பள்ளங்கள் மற்றும் பேருந்து நிறுத்தம் போன்ற இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கியது. தொடர் மழையின் காரணமாக சாலைகள், தெருக்கள் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. மேலும் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையின் காரணமாக அன்னவாசல் அருகே காலாடிப்பட்டி சத்திரத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மழைநீர் புகுந்தது. இந்த தொடர் மழையால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழையளவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு, புதுக்கோட்டை-16, ஆதனக்கோட்டை-5, பெருங்களூர்- 16, ஆலங்குடி- 16, கந்தர்வகோட்டை -8, கறம்பக்குடி -12.60, மழையூர்- 15.80, திருமயம் -16, அரிமளம் -19.20, அறந்தாங்கி -18.80, நாகுடி -15, மீமிசல் -24.20, ஆவுடையார்கோவில் -24.40, மணமேல்குடி -20, கட்டுமாவடி -19, இலுப்பூர் -15, குடுமியான்மலை -14, அன்னவாசல் -14, விராலிமலை -3.50, உடையாளிப்பட்டி -3.20, கீரனூர் -13, பொன்னமராவதி -5.20, காரையூர் -11.20 மில்லி மீட்டர் ஆகும்.

Next Story