பயணிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் ரெயிலில் பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தல்


பயணிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் ரெயிலில் பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 3 Nov 2018 10:45 PM GMT (Updated: 3 Nov 2018 8:42 PM GMT)

பட்டாசு உள்ளிட்டவற்றை கொண்டு செல்லாமல் பாதுகாப்புடன் ரெயில் பயணத்தை மேற்கொள்வது குறித்து, கரூர் ரெயில் நிலைய பயணிகளிடம் போலீசார் துண்டு பிரசுரங்கள் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கரூர்,

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், கரூரில் டெக்ஸ்டைல் ஜவுளி நிறுவனம், கொசுவலை, பஸ்பாடி கட்டும் நிறுவனம் உள்ளிட்டவற்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் உள்பட பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு ரெயிலில் செல்வதை காண முடிகிறது. இதனால் கரூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் ரெயில் பயணத்தின்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருளான பட்டாசுகளை கொண்டு செல்லாமல் இருப்பது குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி கரூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சார்பில் நேற்று நடந்தது. அப்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், பாலசுப்ரமணியன் உள்பட போலீசார் கரூர் மார்க்கமாக வந்து போகும் ரெயில்களில் பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு, கியாஸ் சிலிண்டர், மண்எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்டவற்றை ரெயிலில் கொண்டு செல்வது, ரெயில்வே சட்டம் 1989-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்காக ரூ.1,000 அபராதம் விதிப்பதோடு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. சிலர் மறைமுகமாக பட்டாசுகளை ரெயிலில் கொண்டு செல்லும் போது, எதிர்பாரத விதமாக தீப்பிடித்து விட்டால் பெரிய அளவிலான விபத்துக்கும் அது அச்சாரமாகிவிடும். எனவே ரெயில் பெட்டியில் பட்டாசுகளை யாரேனும் வைத்திருந்தால் பாதுகாப்பு உதவி எண் 182-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், கரூர் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் எடுத்து கூறினர். மேலும் ரெயில் நிலைய நுழைவு வாயிலில் பட்டாசு யாரேனும் எடுத்து வருகின்றனரா? என தீவிர சோதனைக்கு உட்படுத்திய பின்னரே பயணிகளை போலீசார் உள்ளே அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story