வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி தீவிரம் விவசாயிகள் மகிழ்ச்சி


வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி தீவிரம் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 4 Nov 2018 11:15 PM GMT (Updated: 4 Nov 2018 6:47 PM GMT)

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி தீவிரமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற் களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்பட்டு வரு கிறது. குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

மேட்டூர் அணையில் இருந்து குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி அதிக அளவில் நடைபெறும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படவில்லை. ஆனால் சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததாலும், மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததாலும் சாகுபடி பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கர்நாடகம், கேரளாவில் கனமழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் இந்த ஆண்டு 4 முறை மேட்டூர் அணை நிரம்பியது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணைக்கு 22-ந் தேதி வந்தது அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்தி சம்பா, தாளடி சாகுபடி பணிகளை தொடங்கினர். தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சம் எக்டேரில் சம்பாவும், 25 ஆயிரம் எக்டேரில் தாளடியும் என மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 87 ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடியும், 18,500 எக்டேரில் தாளடி சாகுபடியும் செய்யப்பட்டுள்ளன. கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் முழுமையாக செல்லாததால் அங்கு நடவு பணி தாமதமானது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக கடைமடை பகுதிகளான பேராவூரணி, பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் பகுதிகளில் நடவு பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து தஞ்சை மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறும்போது, வருகிற 20-ந் தேதிக்குள் சம்பா, தாளடி பணிகள் முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெய்யும் மழை நமக்கு தேவையானது தான். இந்த மழையால் பயிர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அப்படியே பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருந்தாலும் அந்த நிலை 5 முதல் 8 நாட்கள் நீடித்தால் தான் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும். தேவையான அளவு யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி. உரம் இருப்பில் உள்ளது என்றார்.

இப்போது பெய்ய தொடங்கியுள்ள மழை சம்பா, தாளடி பயிர்களுக்கு மிகவும் ஏற்றது. குளம், ஏரிகளில் தண்ணீர் நிரம்ப வாய்ப்புள்ளது. இந்த மழை இன்னும் 10 நாட்கள் தொடர்ந்து பெய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் அருகே வாளமர்கோட்டை பகுதியிலிருந்து வடக்குநத்தம் பகுதிவரை உபரிநீர் வடியும் வடிவாய்கால் தூர்வாரப்படாததால் செடிகள் வளர்ந்து புதர்களாய் காட்சியளிக்கிறது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உபரிநீர்் வடிகாலில் வடிய வழியில்லாததால் மழைநீர் வயல்களில் தேங்கியுள்ளது. இதனால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதேபோல செண்பகபுரம், ஆர்சுத்திப்பட்டு, வடக்குநத்தம் ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் செல்லக்கூடிய வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தண்ணீர் செல்ல முடியாமல் வாய்க்கால் நிரம்பி வயல்களுக்குள் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. சுமார் 100 ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. எனவே வாய்க்காலை தூர்வாரி நெற்பயிர்களை காக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 500 எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 500 எக்டேரில் சாகுபடி முடிவடைந்துள்ளது. இவற்றில் நேரடி விதைப்பு மட்டும் 69 ஆயிரம் எக்டேரில் நடந்துள்ளது. மீதமுள்ள 3 ஆயிரம் எக்டேரில் வருகிற 15-ந் தேதிக்குள் சாகுபடி பணி நிறைவடையும் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே போல் நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 500 எக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 1 லட்சத்து 30 ஆயிரம் எக்டேரில் சாகுபடி பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 1,500 எக்டேரில் வருகிற 15-ந் தேதிக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்றுகாலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

கும்பகோணம்-3, தஞ்சை-24, திருக்காட்டுப்பள்ளி-5.4, கல்லணை-2, அய்யம்பேட்டை-3, திருவிடைமருதூர்-2.8, மஞ்சலாறு-3, நெய்வாசல்தென்பாதி-5, பூதலூர்-5.4, ஈச்சன்விடுதி-10.2, ஒரத்தநாடு-3.8, மதுக்கூர்-12.8, பட்டுக்கோட்டை-19.7, குருங்குளம்-28, முத்துப்பேட்டை-18.2, குடவாசல்-14.6, கொள்ளிடம்-11, வேதாரண்யம்-9.2, மன்னார்குடி-8, சீர்காழி-6.6, கோரையாறு-6, பாண்டவையாறு-5.2, நீடாமங்கலம்-5.2, மயிலாடுதுறை-4, திருவாரூர்-3.6, பொறையாறு-3, திருத்துறைப்பூண்டி-1.6.

Next Story