இடைத்தேர்தல் வந்தால் ஒரு தொகுதியில் கூட தி.மு.க. வெற்றி பெறாது அமைச்சர் காமராஜ் பேட்டி


இடைத்தேர்தல் வந்தால் ஒரு தொகுதியில் கூட தி.மு.க. வெற்றி பெறாது அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 4 Nov 2018 11:00 PM GMT (Updated: 4 Nov 2018 6:52 PM GMT)

இடைத்தேர்தல் வந்தால் ஒரு தொகுதியில் கூட தி.மு.க. வெற்றி பெறாது என அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடைகள் முழுநேரமும் செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ரேஷன் கடைகள் செயல்படுகிறதா? என்பது பற்றி நேற்று திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார்.

திருவாரூர் கீழவீதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பொருட்களின் தரம், அளவு குறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் 721 ரேஷன் கடைகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 55 ஆயிரத்து 976 குடும்ப அட்டைகள் உள்ளன. அதற்கு தேவையான 6,837 டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 512 டன் சீனி, 269 டன் பாமாயில் ரேஷன் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழையால் பொது வினியோகத்திட்டத்துக்கு எந்த விதத்திலும் பாதிப்பில்லை. 3 மாதங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் உள்பட 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க. அனைத்திலும் வெற்றி பெறும். அதில் மாற்று கருத்து இல்லை.

இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் கூட அ.தி.மு.க. வெற்றி பெறாது என ஸ்டாலின் கூறி உள்ளார். அவர் மாற்றி பேசி விட்டார். ஒரு தொகுதியில் கூட தி.மு.க. வெற்றி பெறாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, தாசில்தார் குணசீலி, கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் ஆர்.டி.மூர்த்தி, மணிகண்டன், கலியபெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோல மன்னார்குடியில் 18-வது வார்டுக்கு உட்பட்ட பந்தலடி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அமைச்சர் காமராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். 

Next Story