திருவாரூரில் போலீஸ் நிலைய வரவேற்பாளர் பயிற்சி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


திருவாரூரில் போலீஸ் நிலைய வரவேற்பாளர் பயிற்சி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Nov 2018 10:30 PM GMT (Updated: 4 Nov 2018 6:58 PM GMT)

திருவாரூரில் போலீஸ் நிலைய வரவேற்பாளர் பயிற்சி நடைபெற்றது. இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்,

தமிழ்நாடு போலீஸ் துறை இயக்குனரின் உத்தரவின் பேரில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு “வரவேற்பாளர்” பயிற்சி கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது.

இதில் பயிற்சி பெற்ற போலீசார் மூலமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்களை வரவேற்க வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் நிலைய வரவேற்பாளர் பயிற்சி 2 நாட்கள் நடந்தது.

இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் தொடங்கி வைத்து பேசினார். இதில் உளவியல் ரீதியிலான பயிற்சி, போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவை மேம் படுத்துவது குறித்த பயிற்சி, பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளை கையாள்வது குறித்த பயிற்சி, தொழில்நுட்பம் குறித்த பயிற்சி உள்பட பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜான்ஜோசப், குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஒரு போலீஸ் நிலையத்துக்கு 2 பேர் வீதம் 66 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Next Story