மின்சாரம் தாக்கி ஆசிரியர் சாவு - தாயார் உள்பட 2 பேர் படுகாயம்


மின்சாரம் தாக்கி ஆசிரியர் சாவு - தாயார் உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Nov 2018 11:00 PM GMT (Updated: 4 Nov 2018 9:12 PM GMT)

புதிய வீட்டில் சாரத்தை பிரித்த போது மின்சாரம் தாக்கி அரசு பள்ளி ஆசிரியர் இறந்தார். அவருடைய தாயார் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடத்தூர்,

கடத்தூரில் புதிய வீட்டில் சாரத்தை பிரித்த போது மின்சாரம் தாக்கி அரசு பள்ளி ஆசிரியர் இறந்தார். அவருடைய தாயார் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள புதுரெட்டியூரைச் சேர்ந்தவர் சின்னராஜ். இவருடைய மகன் ஸ்டாலின் (வயது 38). இவர் வெங்கட்டானூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடத்தூரில் புதுரெட்டியூர் செல்லும் சாலையில் புதிதாக வீடு கட்டி வந்தார். அந்த வீட்டில் கான்கிரீட் போடுவதற்காக சாரம் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலை ஆசிரியர் ஸ்டாலின், அவருடைய தாயார் சிவகாமி, உறவினர் கலியபெருமாள் ஆகியோர், மேஸ்திரியுடன் சாரத்தை பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக சாரத்தில் இருந்த இரும்பு குழாயை ஸ்டாலின் உள்ளிட்ட 3 பேரும் தூக்கியபோது வீட்டு மேலே சென்ற மின்கம்பியில் உரசியது. இதில் அவர்கள் 3 பேரையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கடத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே ஆசிரியர் ஸ்டாலின் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சிவகாமி, கலியபெருமாள் ஆகிய 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கடத்தூர் போலீசார், ஆசிரியர் ஸ்டாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்த ஆசிரியர் ஸ்டாலினுக்கு ரேவதி என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story