உறையூரில் பரபரப்பு பட்டாசு வெடித்ததில் சிறுவன் படுகாயம்; வீட்டின் மேற்கூரை பறந்து விழுந்தது


உறையூரில் பரபரப்பு பட்டாசு வெடித்ததில் சிறுவன் படுகாயம்; வீட்டின் மேற்கூரை பறந்து விழுந்தது
x
தினத்தந்தி 4 Nov 2018 10:45 PM GMT (Updated: 4 Nov 2018 9:31 PM GMT)

திருச்சி உறையூரில் பட்டாசு வெடித்ததில் சிறுவன் படுகாயமடைந்தார். வீட்டின் மேற்கூரை பறந்து விழுந்தது.

திருச்சி,

திருச்சி உறையூர் சின்னசெட்டி தெருவை சேர்ந்த செந்திலின் மகன் பிரகாஷ்(வயது 17). கூலித்தொழிலாளி. செந்தில் இறந்து விட்டார். இதனால் தாய் மற்றும் அண்ணனுடன் பிரகாஷ் வசித்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக வீட்டில் பட்டாசு பாக்ஸ்களை வாங்கி வைத்துள்ளார். வீட்டின் பரண் மேல் வைத்திருந்த பாக்ஸ்களை நேற்று இரவு 7 மணி அளவில் வெடிக்க எடுத்துள்ளார். அப்போது ஒரு பட்டாசு பாக்ஸ் தவறி கீழே விழுந்தது. அந்த இடத்தில் செந்திலின் புகைப்படம் முன்பு விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பட்டாசு பாக்ஸ் விளக்கின் மீது விழுந்ததால் தீப்பிடித்து வெடிக்க தொடங்கியது. பயங்கர சத்தத்துடன் பட்டாசு வெடிக்க தொடங்கியது. மேலும் நாலாபக்கம் சிதறியது. இதில் பிரகாஷ் மீது பட்டாசு விழுந்து வெடித்ததில் படுகாயமடைந்தார். மேலும் வீட்டின் மேற்கூரை (ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்) பறந்து அருகில் இருந்த வீடுகளின் மேற்கூரைகள் மீது விழுந்தது.

படுகாயமடைந்த பிரகாஷை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 4-வது தளத்தில் தீக்காய சிகிச்சை பிரிவில் பிரகாஷ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உறையூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பிரகாஷின் வீட்டில் வெடித்த பட்டாசுகள் வெங்காய வெடி மற்றும் மத்தாப்பூ ரக வகைகள் என தெரிந்தது.

முதலில் நாட்டு வெடி வெடித்ததாக தகவல் பரவியது. ஆனால் அது தவறான தகவல் என்பதை போலீசார் உறுதிபடுத்தினர். வீட்டின் மேற்கூரை பக்கத்து வீடுகளின் மேல் விழுந்ததில் 3 வீடுகளின் மேற்கூரை ஓடுகள் சேதமடைந்தன. வெடிக்காத பட்டாசுகள், வெங்காய வெடிகள் உள்ளிட்டவற்றை போலீசார் அப்புறப்படுத்தி னர். ஒருசில நிமிடங்களில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story