திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் தீபாவளியையொட்டி ரூ.8½ கோடிக்கு மது விற்பனை


திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் தீபாவளியையொட்டி ரூ.8½ கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 7 Nov 2018 10:45 PM GMT (Updated: 7 Nov 2018 5:40 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் தீபாவளியையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது பானங்கள் ரூ.8 கோடியே 47 லட்சத்து 26 ஆயிரத்து 70-க்கு விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.61 லட்சம் அதிகமாகும்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 236 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது.

இந்த டாஸ்மாக் கடைகளில் சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகமாக நடைபெறும். திருப்பூரை பொருத்தவரை சனிக்கிழமையன்று பனியன் தொழிலாளர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்படுவதாலும், ஞாயிறு விடுமுறை தினத்தன்றும் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு மது விற்பனை இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையன்று மது விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

நேற்று முன்தினம் நண்பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறந்ததில் இருந்து இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடை மூடப்படும் வரை டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

தங்களுக்கு பிடித்த மதுவகைகளை மதுப்பிரியர்கள் வாங்கி சென்று அருந்தி, தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். நண்பர்கள் பலர் ஒன்றாக வந்து விரும்பிய மது வகைகளை வாங்கிச்சென்றனர். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று ரூ.7 கோடியே 86 லட்சத்து 10 ஆயிரத்து 840-க்கு மதுவிற்பனை நடைபெற்றிருந்தது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று நேற்று முன்தினம் ஒரே நாளில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.8 கோடியே 47 லட்சத்து 26 ஆயிரத்து 70-க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.61 லட்சத்து 15 ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story