அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் 3 அமைச்சர்கள் பங்கேற்பு


அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் 3 அமைச்சர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 7 Nov 2018 11:00 PM GMT (Updated: 7 Nov 2018 9:29 PM GMT)

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் நடந்த அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் 3 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட தீர்த்தமலை, எச்.புதுப்பட்டி, கடத்தூர், நடுப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இந்த கூட்டங்களுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி தலைவர் டி.ஆர்.அன்பழகன், தர்மபுரி நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், மாவட்ட பொருளாளர் நல்லத்தம்பி, மாவட்ட துணை செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டங்களில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, மோகன், ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன் ஆகிய தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

இந்த 2 தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் தீவிரமாக களப்பணியாற்றி அ.தி.மு.க. வெற்றிபெற பாடுபடுவது என்று இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.சிங்காரம், என்.குப்புசாமி, ஒன்றிய பொறுப்பாளர்கள் கோவிந்தசாமி, மதிவாணன், பசுபதி, விஸ்வநாதன், மாவட்ட நிர்வாகிகள் பழனிசாமி, சுமதி, மோகன், தகடூர்விஜயன் உள்பட கட்சி மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த கூட்டங்களை தொடர்ந்து அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம். எதிர்கட்சிகளை டெபாசிட் இழக்க செய்வோம். கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு இந்த தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் படம் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களின் தயாரிப்பில் உருவான படம். இந்த படத்தில் அரசுக்கு எதிரான கருத்துகளும், மக்களுக்கு வழங்கப்படும் இலவச திட்டங்கள் குறித்த விமர்சனங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறினார்.

Next Story