மேற்கூரையை பிரித்து கைவரிசை: 3 கடைகளில் கொள்ளையடித்த வாலிபர் கைது


மேற்கூரையை பிரித்து கைவரிசை: 3 கடைகளில் கொள்ளையடித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2018 10:45 PM GMT (Updated: 8 Nov 2018 5:28 PM GMT)

வில்லியனூர் பகுதியில் 3 கடைகளில் மேற் கூரையை பிரித்து கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர்,

வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் தலைமையில் போலீசார் சுப்ரமணி, ஸ்ரீராம் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு உறுவையாறு கோட்டைமேடு சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்துவந்து தீவிரமாக விசாரித்ததில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வெள்ளேரிபாளையத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் சேகர் (வயது 29) என்பது தெரியவந்தது.

இவர் கடந்த ஜூன் மாதம் வில்லியனூர் எம்.ஜி.ஆர்.சிலை அருகே உள்ள செல்போன் கடையின் மேற்கூரையில் இருந்த ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்து 13 செல்போன்களை திருடினார். அந்த செல்போன்களை விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு வருபவர்களிடம் விற்பனை செய்து, அந்த பணத்தில் மதுகுடித்து உல்லாசமாக இருந்தார்.

அந்த பணம் செலவானதும் மீண்டும் வில்லியனூர் பகுதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் வந்து, ஒதியம்பட்டு சாலையில் உள்ள மளிகை கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே சென்று கல்லா பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரத்தையும், கடந்த 27-ந் தேதி கோட்டைமேடு பகுதியில் உள்ள பாலமுருகன் என்பவரின் சுவீட் கடையின் சிமெண்டு மேற்கூரையை உடைத்து ரூ. 10 ஆயிரத்தையும் கொள்ளையடித்தார். அந்த பணம் செலவானதால் மீண்டும் திருடும் நோக்கில் கோட்டைமேடு சந்திப்பில் கடைகளை நோட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சேகரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1500 ரொக்கம் மற்றும் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடைகளின் மேற்கூரையை பிரித்து திருடுவதில் கை தேர்ந்தவரான சேகர், ஆத்தூர், கள்ளக்குறிச்சி பகுதி ஜவுளி கடைகளிலும், தாம்பரத்தில் ஒரு கடையிலும் கைவரிசை காட்டி, சிறை தண்டனை பெற்றவர்.

Next Story