மொரப்பூரில் சிகிச்சையின்போது பெண் சாவு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


மொரப்பூரில் சிகிச்சையின்போது பெண் சாவு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Nov 2018 11:00 PM GMT (Updated: 8 Nov 2018 9:29 PM GMT)

மொரப்பூரில் மருத்துவமனையில் சிகிச்சையின்போது பெண் இறந்ததால் ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மொரப்பூர்,

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ளது சுண்டாங்கிப்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் கார்மேகம். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தவமணி (வயது 37). இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

தவமணிக்கு கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக மொரப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நேற்று சென்றார். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து பார்த்து விட்டு ஊசி போட்டார்.

சிகிச்சை பெற்ற சிறிதுநேரத்திலேயே தவமணி அந்த மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார்.

இதைஅறிந்ததும் தவமணியின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தவமணிக்கு தவறான சிகிச்சை அளித்ததால் அவர் இறந்து விட்டார் என்று கூறி அந்த மருத்துவமனையின் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். பின்னர் தர்மபுரி-அரூர் பிரிவு ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அரூர் உதவி கலெக்டர் புண்ணியகோட்டி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். உறவினர்கள் மற்றும் டாக்டரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story