சூலூர் அருகே : இலவச பட்டா நிலம் கேட்டு போராட்டம்


சூலூர் அருகே : இலவச பட்டா நிலம் கேட்டு போராட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2018 10:00 PM GMT (Updated: 8 Nov 2018 9:29 PM GMT)

சூலூர் அருகே இலவச பட்டா நிலம் கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

சூலூர்,


கோவையை அடுத்த சூலூர் கண்ணம்பாளையம் மற்றும் ராவத்தூர் பகுதி பொதுமக்கள் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, குடிசை போட முயன்றனர். மேலும் அவர்கள், இலவச பட்டா நிலம் கேட்டு நேற்று முத்துகவுண்டன்புதூர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பொது மக்கள் கூறியதாவது, கண்ணம்பாளையம், ராவத்தூர் பகுதியில் எஸ்.சி, எஸ்.டி மக்களுக்கு பட்டா வழங்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சூலூர் தாசில்தார் பழனி என்பவரின் ஒப்புதலின் பேரில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள புறம்போக்கு நிலத்தை தேர்வு செய்தனர். ஆனால் அந்த நிலத்தை இதுவரை பிரித்து கொடுக்கவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சூலூர் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள தரிசு புறம்போக்கு நிலத்தை பிரித்து பட்டா போட்டு தர வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த சூலூர் தாசில்தார் ஜெகதீசன், துணை தாசில்தார் இந்திரா, சூலூர் வருவாய் ஆய்வாளர் செல்வம், இருகூர் கிராம நிர்வாக அலுவலர் நவீன் குமார், உதவி கமிஷனர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story