ஓசூரில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பிரபல ரவுடி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது


ஓசூரில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பிரபல ரவுடி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 8 Nov 2018 11:00 PM GMT (Updated: 8 Nov 2018 9:38 PM GMT)

ஓசூரில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பிரபல ரவுடி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அலுவலக சாலையை சேர்ந்தவர் சூரி (வயது 38). தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக இருந்தார். இவர் கடந்த 19-9-2016 அன்று ஓசூர் ரெயில் நிலையம் எதிரே உள்ள நேரு நகரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக ஓசூரை சேர்ந்த பிரபல ரவுடி கஜா என்கிற கஜேந்திரன் (28). மத்திகிரி பாபு (26), ஓசூர் ராயக்கோட்டை சாலையை சேர்ந்த சாஜித் பாஷா(24) உள்பட சிலரை ஓசூர் போலீசார் கைது செய்தனர். இதில் ரவுடி கஜா, பாபு, சாஜிக்பாஷா ஆகியோர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்குமாருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையை ஏற்று, கஜா, பாபு, சாஜிக்பாஷா ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேற்று உத்தரவிட்டார்.

Next Story