அருணாசலேஸ்வரர் கோவில் பெரிய தேருக்கு புதிய மர சிற்பங்கள் அமைக்க வேண்டும் - ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை


அருணாசலேஸ்வரர் கோவில் பெரிய தேருக்கு புதிய மர சிற்பங்கள் அமைக்க வேண்டும் - ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 8 Nov 2018 11:30 PM GMT (Updated: 8 Nov 2018 10:06 PM GMT)

அருணாசலேஸ்வரர் கோவில் பெரிய தேருக்கு புதிய மர சிற்பங்கள் அமைக்க வேண்டும் என ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பெரிய தேருக்கு புதிய மர சிற்பங்கள் அமைக்க வேண்டும் என்று ஆய்வுக்கு வந்த கலெக்டர் கந்தசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முக்கிய விழாவாகும். இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா வருகிற 14-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. விழா நாட்களில் காலையிலும், இரவிலும் சாமி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் மாட வீதியில் வீதியுலா நடைபெறும். 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு கோவிலில் தீவிரமாக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை தீபத்திருவிழாவுக்காக செய்யப்பட்டு உள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் வருவாய்த் துறையினர், கோவில் அலுவலர்கள் உடனிருந்தனர்.

அப்போது கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கோவிலில் பரணி தீபம், மகா தீபத்தின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள், கோவில் நிர்வாகம் மூலம் செய்யப்பட்டு உள்ள பணிகள் குறித்து கோவில் இணை ஆணையரிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் கோவிலில் உள்ள சக்தி விலாஸ் மண்டபத்தில் போலீசாருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து கோவிலுக்கு வெளியே தேர்கள் புனரமைக்கும் பணியை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் வருவாய் துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கலெக்டர் தேரின் உறுதித்தன்மை குறித்து கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கலெக்டரிடம், பெரிய தேரில் உள்ள மர சிற்பங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனது. இதனால் தேர் அழகு குறைந்து காணப்படுகிறது. எனவே, தேருக்கு புதிய மர சிற்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார்.

முன்னதாக கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய்த்துறையினர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.



Next Story