விவசாயிகளுக்கான அரசின் திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை


விவசாயிகளுக்கான அரசின் திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 8 Nov 2018 10:34 PM GMT (Updated: 8 Nov 2018 10:34 PM GMT)

விவசாயிகளின் தற்கொலையை தடுக்க விவசாயிகளுக்கான அரசின் திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தாராபுரம்,

தாராபுரத்தை அடுத்த கெத்தல்ரேவை சேர்ந்த விவசாயி முத்துசாமி, தனது தாயார் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உண்மை அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி தாராபுரத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட மனித உரிமைகள் குழு ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பொன்ராம் தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார், தாலுகா செயலாளர் வெங்கட்ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விவசாயி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது குறித்த, உண்மை அறிக்கை பற்றி வக்கீல் பொன்ராம் கூறியதாவது:-

குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்ணாம்பட்டியை சேர்ந்த விவசாயி முத்துசாமி கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி தனது தாயார் மற்றும் 2 குழந்தைகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தின் உண்மை நிலையை கண்டறிவதற்காக, மாவட்ட மனித உரிமைகள் குழுவும், தமிழக விவசாயிகள் சங்கத்தின் குழுவும் இணைந்து ஆய்வு நடத்தினோம். அதில் முத்துசாமி சில வருடங்களுக்கு முன்பு பெரிய அளவில் விவசாயம் செய்ததோடு, அதிக கால்நடைகளை வளர்த்து வந்துள்ளார்.

கடந்த சில வருடமாக ஏற்பட்ட வறட்சியின் காரணமாக விவசாயம் அழிந்து போனது. கால்நடைகள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டதில் முத்துசாமிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கடனாளியானார். கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.

உப்பாறு அணையை ஒட்டியுள்ள கிராமங்களில் முத்துசாமியை போன்ற விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள் எதுவும் உதவவில்லை. நிறுவனக்கடன் கிடைக்காததால் இப்பகுதி விவசாயிகள் அதிகவட்டிக்கு தனியாரிடம் கடன் வாங்குகிறார்கள். வறட்சியைப் போக்க பாசன வசதி திட்டம் எதுவும் அரசு நிறைவேற்றவில்லை. குறிப்பாக உப்பாறு பாசனத் திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை. வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. சிறு,குறு விவசாயிகளுக்கு வங்கி கடன்கள் கிடைப்பதில்லை.

இதனால் விவசாயிகளின் குடும்பங்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறது. இனி இந்த பகுதியில் எந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமை. முத்துசாமியின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். விவசாயிகளின் தற்கொலையை தடுக்க விவசாயி களுக்கான அரசு திட்டங்கள் குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை அரசு வெளியிட வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு வங்கி அல்லது கூட்டுறவு கடன்கள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story