கூடலூரில் சாலையின் நடுவில் வைத்துள்ள தடுப்பு சுவர்களால் விபத்து ஏற்படும் அபாயம்


கூடலூரில் சாலையின் நடுவில் வைத்துள்ள தடுப்பு சுவர்களால் விபத்து ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 9 Nov 2018 9:30 PM GMT (Updated: 9 Nov 2018 5:58 PM GMT)

கூடலூரில் சாலையின் நடுவில் வைத்துள்ள தடுப்பு சுவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

கூடலூர்,

தமிழகம்- கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் இணையும் எல்லையில் கூடலூர் நகரம் உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கூடலூர் கிளை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் சுமார் 50 பஸ்கள் இயக்கப்படுகிறது. இருப்பினும் பஸ் வசதி போதிய அளவு இல்லாததால் பொதுமக்கள் ஆட்டோக்களை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். கூடலூர் நகரில் மட்டும் 2,500 ஆட்டோக்கள் ஓடுகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரத்தில் வாகன நெருக்கடி தவிர்க்க முடியாததாகி வருகிறது.

இந்த நிலையில் போக்குவரத்து போலீசாரின் பரிந்துரையின் பேரில் கூடலூர்- மைசூரு மற்றும் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் தடுப்பு சுவர்கள் கடந்த மாதம் முதல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவுக்கு சாலை குறுகலாக மாறி விட்டது. பயணிகளை ஏற்றி செல்வதற்காக அரசு பஸ்களை டிரைவர்கள் நிறுத்தினால், பின்னால் வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

மேலும் விபத்து காலங்களில் ஆம்புலன்சு உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக ஆஸ்பத்திரிக்கு செல்ல முடிவது இல்லை. சில சமயங்களில் ஆம்புலன்சு வாகனம் நடுவழியில் நின்று தாமதமாக செல்லும் நிலையை காண முடிகிறது. கூடலூர் அக்ரஹார தெரு முதல் ஊட்டி செல்லும் சாலையில் உள்ள ராஜகோபாலபுரம் வரை தடுப்பு சுவர்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வங்கிகள், ஆஸ்பத்திரிகள், கோவில்கள் மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளன. சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்களால் பொதுமக்களும் சாலையை கடந்து செல்ல முடிவது இல்லை.

இதேபோல் சுற்றுலா பயணிகள் சாலையோரம் தங்களது வாகனங்களை நிறுத்த இடவசதியும் இல்லை. ராஜகோபாலபுரம் பகுதியில் வளைவான இடத்தில் தடுப்பு சுவர்கள் வைக்கப்பட்டு உள்ளதால், மைசூரு மற்றும் ஊட்டியில் இருந்து வரும் அரசு மற்றும் சுற்றுலா பஸ்களை திருப்ப முடியாமல் டிரைவர்கள் திணறி வருகின்றனர். குறிப்பாக கர்நாடகா அரசின் சொகுசு பஸ்கள் வளைவுகளில் திரும்ப முடியாமல், சற்று பின்னோக்கி சென்று வளைவுகளில் திரும்பி செல்கின்றன. இந்த சமயத்தில் பின்னால் வரும் வாகனங்கள் போதிய இடவசதி இன்றி சாலையில் வரிசையாக நின்று செல்கின்றன.

இதனால் தேவை இல்லாத இடங்களில் உள்ள தடுப்பு சுவர்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள், அரசு பஸ் டிரைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இல்லையெனில் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் சாலையில் நடந்து செல்கின்றனர். தடுப்பு சுவர்களை வைத்துள்ளதால் சாலையின் அகலம் குறைந்துள்ள நிலையில், வாகனங்கள் சிரமத்துடன் இயக்கப்படுகிறது.

இந்த சமயத்தில் பள்ளி மாணவ- மாணவிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் காணப்படுகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தரப்பில் கொடுத்த புகாரின் பேரில் எம்.எல்.ஏ. திராவிடமணி தடுப்பு சுவர்கள் வைக்கப்பட்டது குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது தேவை இல்லாத இடங்களில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்களை அகற்றுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை அகற்றப்படவில்லை. எனவே கூடலூர் நகரில் தேவை இல்லாத இடங்களில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்களை அகற்ற மாவட்ட உயரதிகாரிகள் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கூறிய தாவது:-

கூடலூரில் போக்குவரத்து நெருக்கடி செயற்கையானது. தானாக இயங்கும் வகையில் போக்குவரத்து தானியங்கி சிக்னல் செயல்படுகிறது. சீசன் மற்றும் வாகனங்கள் அதிகளவு இயக்கப்படும் காலங்களில் போக்குவரத்து சிக்னலை போலீசார் இயக்குவது இல்லை. குறைந்த நேரத்தில் தானாக செயல்படும் வகையில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கும் வகையில் கூடலூர் நகர் முழுவதும் சாலையின் நடுவில் தடுப்பு சுவர்களை வைத்துள்ளனர். இதனால் சாலை குறுகலாகி போக்குவரத்து பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

சுற்றுலா பயணிகளும் நகருக்குள் வாகனங்களை நிறுத்துவது இல்லை. பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கூட மாணவர்கள் சாலையில் நடந்து செல்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை அதிகாரிகள் கருத்தில் கொள்வது இல்லை. நீலகிரி மாவட்டத்தில் கூடலூரை தவிர வேறு எந்த ஊர்களிலும் தடுப்பு சுவர்கள் அமைத்தது இல்லை. தடுப்பு சுவர்கள் வைப்பதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது. இவ்வாறு அவர்கள் அதிருப்தியுடன் கூறினர்.

Next Story