கோவை: தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ரூ.48 ஆயிரம் பறிமுதல்


கோவை: தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ரூ.48 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Nov 2018 10:00 PM GMT (Updated: 9 Nov 2018 8:13 PM GMT)

கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.48 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

கோவை,

கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் பின்புறம் தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையாளர் அலுவலகம் அமைந்து உள்ளது. இங்கு நேற்று மதியம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், பரிமளா, சசிலேகா மற்றும் போலீசார் திடீரென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.48 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கூடுதல் ஆணையாளர் செந்தில் குமாரி, உதவி ஆணையாளர்கள் ராஜசேகர், லெனின் ஆகியோரிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களின் செல்போன்களையும் பறிமுதல் செய்ததாக தெரிகிறது.

விசாரணை முடிவில் சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர். மதியம் 2 மணிக்கு தொடங் கிய இந்த சோதனை இரவு 9 மணி வரை நீடித்தது. சோதனை காரணமாக அலுவலக ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல போலீசார் அனுமதிக்க வில்லை. மேலும் வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட வில்லை. தரைவழி போன் இணைப்பையும் சிறிது நேரத்துக்கு போலீசார் துண்டித்தனர். 7 மணி நேரம் நடைபெற்ற சோதனையால் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் மாதந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆய்வு கூட்டத்தின் போது நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெறப்படுவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று தொழிலாளர் நலத்துறை மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நாங்கள் சோதனை நடத்தினோம்.

இந்த சோதனையில் உதவி ஆணையாளர்கள் ராஜசேகர் (கோவை), லெனின் (திருப்பூர்) ஆகியோரிடம் இருந்து ரூ.45 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கூட்டம் நடைபெற்ற அறையின் மேஜைக்கு கீழே இருந்து ரூ.2 ஆயிரத்து 500 கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை நடந்தது. இது தொடர்பாக சில ஆவணங்களை கைப்பற்றி உள்ளோம். அதன் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story