பணம் மதிப்பு நீக்க தினம்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பணம் மதிப்பு நீக்க தினம்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2018 9:30 PM GMT (Updated: 9 Nov 2018 8:13 PM GMT)

பணம் மதிப்பு நீக்க நாளை கருப்பு தினமாக அனுசரித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கோவை,


மத்திய பா.ஜனதா அரசு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி செல்லாது என்று அறிவித்தது. பணம் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 2-வது ஆண்டு தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

ஒரே நாள் இரவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று பா.ஜனதா அரசின் பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதனால் சாதாரண, நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். தாங்கள் சம்பாதித்த பணத்தை வங்கியில் மாற்றிக் கொள்வதற்கு நாள் கணக்கில் பொதுமக்கள் காத்து கிடந்தனர். இதனால் அனைத்து துறைகளும் வீழ்ச்சி அடைந்தன.

கருப்பு பணத்தை மீட்கவே பணம் மதிப்புநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மோடி கூறினார். ஆனால் அந்த நடவடிக்கை மூலம் கருப்பு பணம் மீட்கப்பட வில்லை. ஆனால் சில நிறுவனங்களின் நலனுக்காக தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்கள்பட்ட துன்பம் 2 ஆண்டுகள் ஆகியும் மறையவில்லை. இதற்கு காரணமான பிரதமர் நரேந்திரமோடிக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். அதற்கு ஏற்றவாறு காங்கிரசார் தேர்தல் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே ஏழைகளை வஞ்சிக்காதே’, என்றும், புதிதாக அச்சிடப்பட்ட 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளை காட்டி மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதில், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.என்.கந்தசாமி மற்றும் கே.எஸ்.மகேஷ்குமார், கணபதி சிவக்குமார், சவுந்தரகுமார், வக்கீல் கருப்பசாமி, இராம.நாகராஜ், கோவை போஸ், சாய்சாதிக், அரோமா நந்தகோபால், வடவள்ளி காந்தி, சொக்கம்புதூர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story