அமைந்தகரையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு


அமைந்தகரையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 9 Nov 2018 10:15 PM GMT (Updated: 9 Nov 2018 8:14 PM GMT)

அமைந்தகரையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், மடிக்கணினி மற்றும் ரூ.4 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

பெங்களூருவைச் சேர்ந்தவர் சசிகாந்த் ரெட்டி (வயது 32). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சைலஜா ரெட்டி (27). கணவன்- மனைவி இருவரும் கடந்த 3 மாதங்களாக சென்னை அமைந்தகரை, வெற்றி விநாயகர் கோவில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையின்மைக்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று விட்டனர். இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகைகள், 1 மடிக்கணினி, ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இது குறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

சென்னை கோயம்பேடு மந்தவெளி தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் (35). பெயிண்டரான இவர், தீபாவளி பண்டிகையையொட்டி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார். தீபாவளி பண்டிகை முடிந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

சக்திவேல் குடும்பத்துடன் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்று இருப்பதை அறிந்துகொண்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச்சென்று உள்ளனர். இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story