விழுப்புரம் மாவட்டத்தில்: ‘சர்கார்’ படம் ஓடும் 22 தியேட்டர்களில் 2-வது நாளாக போலீஸ் பாதுகாப்பு


விழுப்புரம் மாவட்டத்தில்: ‘சர்கார்’ படம் ஓடும் 22 தியேட்டர்களில் 2-வது நாளாக போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 9 Nov 2018 10:00 PM GMT (Updated: 9 Nov 2018 8:55 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் ‘சர்கார்’ படம் ஓடும் 22 தியேட்டர்களில் நேற்று 2-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

விழுப்புரம், 

நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகள், விமர்சனங்களுக்கு மத்தியில் தீபாவளி பண்டிகையன்று தமிழகத்தின் பல்வேறு தியேட்டர்களில் வெளியானது.

இந்த திரைப்படத்தில் அரசுக்கு எதிராக மக்களிடையே வன்முறையை தூண்டும் விதமான காட்சிகள் இருப்பதாகவும், இந்த படத்தை திரையிடக்கூடாது என வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் ‘சர்கார்’ திரைப்படம் வெளியாகியுள்ள தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விஜய் ரசிகர்கள் வைத்திருந்த கட்-அவுட்டுகள், விளம்பர பதாகைகளை கிழித்து சேதப்படுத்தினர்.

அந்த வகையில் சர்கார் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் உள்ள 2 தியேட்டர்களின் கதவுகளை நேற்று முன்தினம் அ.தி.மு.க.வினர் பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக சர்கார் படம் ஓடிக்கொண்டிருக்கும் விழுப்புரத்தில் 4 தியேட்டர்கள், சங்கராபுரத்தில் 2 தியேட்டர்கள், செஞ்சியில் ஒரு தியேட்டர் என மாவட்டம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் நேற்று முன்தினம் முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

‘சர்கார்’ படம் திரையிடப்பட்டுள்ள அனைத்து தியேட்டர்களிலும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க நேற்று 2-வது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழுப்புரம் நகரில் 4 தியேட்டர்களிலும், திண்டிவனம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் தலா 3 தியேட்டர்களிலும், சங்கராபுரம், சின்னசேலம், உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள தலா 2 தியேட்டர்களிலும், கண்டமங்கலம், விக்கிரவாண்டி, செஞ்சி ஆகிய இடங்களில் தலா ஒரு தியேட்டர்களிலும் ஆக மொத்தம் மாவட்டம் முழுவதும் சர்கார் படம் ஓடும் 22 தியேட்டர்களிலும் நேற்று 2-வது நாளாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

Next Story