எளம்பலூர் மலை அடிவாரத்தில் கொட்டைகை அமைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு


எளம்பலூர் மலை அடிவாரத்தில் கொட்டைகை அமைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Nov 2018 11:00 PM GMT (Updated: 10 Nov 2018 5:32 PM GMT)

எளம்பலூர் மலை அடிவாரத்தில் கொட்டைகை அமைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் வசிக்கும் மக்களில் பலருக்கு சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். அவர்கள் வீடு கட்டுவதற்கு அரசு புறம்போக்கு நிலத்தில் இலவச பட்டா கேட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அந்தப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் எளம்பலூர் மலை அடிவாரத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஒரு குடும்பத்தினர் திடீரென்று நேற்று காலை சிமெண்டு மேற்கூரையிலான கொட்டைகையை போட ஆரம்பித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகர் பொதுமக்களும் கொட்டைகை அமைக்க மலை அடிவாரத்திற்கு உடனடியாக வந்தனர்.


பின்னர் அவர்கள் கொட்டைகை அமைப்பதற்கு தங்களுக்கான நிலத்தை தேர்வு செய்து அளந்து, அதில் அடையாளத்திற்காக கற்களை அடுக்கி வைத்தும், குச்சிகளை நட்டு வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் வருவாய் ஆய்வாளர் கதிர், எளம்பலூர் கிராம நிர்வாக அதிகாரி ராமதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த புறம்போக்கு நிலத்தில் ஒரு சில குடும்பங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே பட்டா ஏதும் இல்லாமல் வீடு கட்டி குடிபுகுந்து விட்டதாகவும், மேலும் அவர்கள் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு வாங்கி விட்டனர் என்ற குற்ற சாட்டினை பொதுமக்கள், அதிகாரிகளிடம் கூறினர்.


மேலும் எங்களுக்கும் இந்த இடத்தில் வீடு கட்ட நிலம் ஒதுக்கி தர வேண்டும் என்று பொதுமக்கள் ஆவேசத்துடன் அதிகாரிகளிடம் கூறினர். அரசு பட்டா ஒதுக்குவதற்கு முன்பு இடத்தை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது, இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் ஆய்வாளர் கதிர் தெரிவித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதனை தொடர்ந்து அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கொட்டைகையும் அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story