சர்கார் திரைப்படத்திற்கு எதிரான போராட்டம்: முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் செயல் - வேல்முருகன் பேட்டி


சர்கார் திரைப்படத்திற்கு எதிரான போராட்டம்: முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் செயல் - வேல்முருகன் பேட்டி
x
தினத்தந்தி 10 Nov 2018 11:15 PM GMT (Updated: 10 Nov 2018 6:51 PM GMT)

சர்கார் திரைப்படத்திற்கு எதிரான போராட்டம் என்பது மக்களை முக்கிய பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் செயல் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.

சிவகங்கை,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சிவகங்கையில் இருந்து சென்னை கவர்னர் மாளிகை நோக்கி சைக்கிள் பேரணி நடைபெறுகிறது.

இந்த பேரணி தொடக்க விழா சிவகங்கையில் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் வேல்முருகன் மற்றும் சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் தாயார் ராஜேசுவரி அம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு பேரணியை தொடங்கிவைத்தனர். இதில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் வேல்முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யலாம் என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியும், அவர் காலம் தாழ்த்தி வருவது கண்டிக்கத்தக்கது. அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியே இந்த சைக்கிள் பேரணி நடைபெறுகிறது. மதவாத சக்திகளுக்கு எதிராக அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைவதை தமிழக வாழ்வுரிமை கட்சி வரவேற்கிறது.

தமிழகத்தில் 8 வழிச்சாலை திட்டம், நியூட்ரினோ திட்டம், மீத்தேன் திட்டம், விவசாயிகள் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் இருக்கும்போது தமிழக அமைச்சர்கள் திரைப்படத்திற்கு எதிராக போராடுவது என்பது கண்டிக்கதக்கது. ‘மீடு‘ சர்ச்சை மற்றும் சர்க்கார் திரைப்படத்திற்கு எதிரான போராட்டம் என்பது முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களையும், ஊடகங்களையும் திசை திருப்பும் செயல்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story