கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் சாவு திசையன்விளை அருகே சோகம்


கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் சாவு திசையன்விளை அருகே சோகம்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:15 PM GMT (Updated: 10 Nov 2018 6:59 PM GMT)

திசையன்விளை அருகே, கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்தார்.

திசையன்விளை, 

திசையன்விளை அருகே, கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்தார்.

கணவர் சாவு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியை சேர்ந்தவர் ஆண்டி நாடார் என்ற மகாலிங்கம் (வயது 83). அவருடைய மனைவி அபூர்வ மணி (76). இவர்களுக்கு 5 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 2 மகன்கள் நவ்வடியிலும், 3 மகன்கள் சென்னையிலும் வசித்து வருகின்றனர். மகள் திசையன்விளையில் வசித்து வருகிறார்.

நவ்வலடியில் தனித்தனி வீடுகளில் வசித்து வரும் 2 மகன்களும், அடிக்கடி சென்று தாய், தந்தையை கவனித்து வந்தனர். இந்தநிலையில் முதுமை காரணமாக மகாலிங்கம் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். மனைவி அபூர்வ மணியும் உடல்நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருந்தார். நேற்று முன்தினம் மாலையில் மகாலிங்கம் திடீரென இறந்து விட்டார்.

துக்கம் தாங்காமல் மனைவியும் சாவு

அப்போது வழக்கமாக மூத்த மகன் சமுத்திர பாண்டி தனது தாய், தந்தையை பார்க்க சென்ற போது, மகாலிங்கம் இறந்து போனது தெரியவந்தது. பின்னர் இதுபற்றி மகள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கணவர் இறந்த விவரம் அதுவரை தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் உறவினர்கள் வீட்டுக்கு திரண்டு வருவதை கண்ட அபூர்வ மணி, ஏன் எல்லோரும் ஒன்றாக வந்துள்ளர்கள் என கேட்டுள்ளார். அப்போது தான், அவரிடம் கணவர் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் சிறிது நேரத்தில் இறந்தார்.

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

சாவிலும் இணை பிரியாத தம்பதியரின் உடல் நேற்று காலை ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story