3-வது திருமணம் செய்த பெண் போலீஸ் மாயம்: போலீஸ் நிலையத்தில் வக்கீல்-ஏட்டு மோதல்


3-வது திருமணம் செய்த பெண் போலீஸ் மாயம்: போலீஸ் நிலையத்தில் வக்கீல்-ஏட்டு மோதல்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:15 PM GMT (Updated: 10 Nov 2018 7:10 PM GMT)

3-வது திருமணம் செய்த பெண் போலீஸ் திடீரென மாயமானார். இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் வக்கீலுக்கும், ஏட்டுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் ஏட்டு ஒருவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக அந்த 2 கணவர்களும் பெண் போலீஸ் ஏட்டை விட்டு பிரிந்து சென்று விட்டனர்.

இந்த நிலையில் அந்த பெண் போலீஸ் ஏட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வக்கீல் ஒருவரை காதலித்து மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

இதையடுத்து பெண் போலீஸ் ஏட்டும், வக்கீலும் பாப்பாநாடு போலீஸ் நிலைய குடியிருப்பில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே தொடர்ந்து தகராறு நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற பெண் போலீஸ் ஏட்டு இரவு வரை வீடு திரும்பவில்லை. அவர் மாயமானதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த வக்கீல் நேற்று முன்தினம் இரவு பாப்பாநாடு போலீஸ் நிலையத்துக்கு சென்று பெண் போலீஸ் ஏட்டு மாயமானது குறித்து அங்கு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு ஒருவரிடம் கேட்டார்.

மேலும் இதுகுறித்து ஒரு புகார் மனுவையும் கொடுத்தார். ஆனால் அந்த புகார் மனுவை வாங்க ஏட்டு மறுத்து விட்டார். இதனால் வக்கீலுக்கும், ஏட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். வக்கீலும், ஏட்டும் மோதலில் ஈடுபட்டதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story