மகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் தந்தை கைது


மகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் தந்தை கைது
x
தினத்தந்தி 10 Nov 2018 10:45 PM GMT (Updated: 10 Nov 2018 7:16 PM GMT)

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

ஈரோடு,

ஈரோட்டை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கரூர் மாவட்டம் அய்யம்பாளையத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்து, அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். 2–வது மகளும், 3–வது மகளும் ஈரோட்டில் தாயுடன் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் முறையே 7 மற்றும் 8–ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சிறுமிகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் கடந்த மாதம் சைல்டு லைன் அமைப்பு சார்பில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும்? என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அப்போது 8–ம் வகுப்பு படிக்கும் தொழிலாளியின் 2–வது மகள், சைல்டு லைன் அமைப்பினரிடம் தனது தந்தை தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சைல்டு லைன் அமைப்பினர் இதுபற்றி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அப்போது அந்த சிறுமி, ‘எனது தந்தை கரூர் மாவட்டம் அய்யம்பாளையத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர் கடந்த ஜூன் மாதம் 9–ந் தேதியில் இருந்து கடந்த 5–ந்தேதி வரை வீட்டிற்கு வரும்போதெல்லாம் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இதுகுறித்து வெளியில் கூறினால் அம்மாவையும், தங்கையையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார். இதனால் பயந்து போய் நான் யாரிடமும் இதுபற்றி செல்லவில்லை.

எங்கள் பள்ளிக்கூடத்தில் பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது தான் எனக்கு தைரியம் வந்து சைல்டு லைன் அமைப்பினரிடம் நடந்த கொடுமைகளை கூறினேன். என்று கண்ணீர் மல்க கூறினார். இதைத்தொடர்ந்து மகளிர் போலீசார் சிறுமியின் தந்தையிடம் விசாரணை நடத்த சென்றனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அதனால் அவரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் சிறுமியின் தந்தை கரூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நேற்று முன்தினம் கரூருக்கு விரைந்து சென்று அவரை பிடித்து ஈரோட்டுக்கு கொண்டு வந்தனர்.

அதைத்தொடர்ந்து போலீசார் அவர் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பெற்ற மகள் என்றும் பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனவேதனையுடன் கூறினார்கள்.


Next Story