தஞ்சை மாவட்டத்தில் 488 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்


தஞ்சை மாவட்டத்தில் 488 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 10 Nov 2018 11:00 PM GMT (Updated: 10 Nov 2018 7:58 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் 488 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட 488 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. முன்னிலை வகித்தார்.

நிகழச்சியில் 488 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 24 ஆயிரத்து 606 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கையூட்டி, அவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவதற்கு வழிவகை செய்யும் வகையில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அரசுப்பணியில் மாற்றுத் திறனாளிகளுக்கென தனி இட ஒதுக்கீடு வழங்கினார். மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார். எனவே மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் பயன் பெற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் பரசுராமன், பாரதிமோகன், போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் துரை.திருஞானம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் மோகன், தஞ்சாவூர் நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன் நன்றி கூறினார். தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆயத்தப்பணிகள், மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள், டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் ஆகியவை குறித்து அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story