இந்து மகா சபாவினர் மோட்டார் சைக்கிளில் பேரணி செல்ல முயற்சி 121 பேர் கைது


இந்து மகா சபாவினர் மோட்டார் சைக்கிளில் பேரணி செல்ல முயற்சி 121 பேர் கைது
x
தினத்தந்தி 11 Nov 2018 11:00 PM GMT (Updated: 11 Nov 2018 2:57 PM GMT)

சபரிமலை புனிதத்தை பாதுகாக்க வலியுறுத்தி மோட்டார் சைக்கிளில் பேரணியாக செல்ல முயன்ற இந்து மகா சபாவினர் 121 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

அகில பாரத இந்து மகா சபா சார்பில் நாகர்கோவில் நாகராஜா கோவில் முன் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் வரை மோட்டார் சைக்கிள் பேரணி 11–ந் தேதி (அதாவது நேற்று) நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாரம்பரிய புனிதத்தை பாதுகாக்க வேண்டும், சபரிமலையை கொச்சைப்படுத்த முயன்ற பெண்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும், அய்யப்ப பக்தர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மோட்டார் சைக்கிள் பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனினும் போலீஸ் தடையை மீறி நேற்று பேரணி செல்வதற்காக அகில பாரத இந்து மகா சபா தலைவர் தா.பாலசுப்பிரமணியம் தலைமையில் நிர்வாகிகள் மோட்டார் சைக்கிள்களுடன் நாகராஜா கோவில் முன் திரண்டனர். பின்னர் அனைவரும் பேரணி செல்ல முயன்ற னர்.

இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். அந்த வகையில் 121 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை ஒரு மண்டபத்தில் அடைத்தனர்.

முன்னதாக அகில பாரத இந்து மகா சபா தலைவர் தா.பாலசுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியபோது, “சபரிமலை அய்யப்பன் கோவில் புனிதத்தை காக்க நாங்கள் எந்த விதமான போராட்டத்தையும் நடத்த தயாராக உள்ளோம். சபரிமலை அய்யப்பன் கோவில் ஐதீகம் டெல்லியில் இருப்பவர்களுக்கு எப்படி தெரியும்? எனவே தொன்று தொட்டு கடைப்பிடித்து வரும் ஆகம விதிகளை சபரிமலையில் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்“ என்றார்.

Next Story